4361.'அளித்தவர், அஞ்சும் நெஞ்சின்
      அடைத்தவர், அறிவில் மூழ்கிக்
குளித்தவர், இன்ப துன்பம்
      குறைத்தவர், அன்றி, வேரி
ஒளித்தவர் உண்டு, மீண்டு, இவ்
      உலகு எலாம் உணர ஓடிக்
களித்தவர் எய்தி நின்ற கதி
      ஒன்று கண்டது உண்டோ?

     அளித்தவர் - (அபயம் என்று அடைந்தவரைப்) பாதுகாத்தவரும்;
அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் -
ஐம்பொறிகளையும் மனத்தில்
அடக்கியவர்களும்; அறிவில் மூழ்கிக் குளித்தவர் - தத்துவ ஞானத்தில்
ஆழ்ந்திருப்பவரும்; இன்பம் துன்பம் குறைத்தவர் - இன்ப துன்பங்களில்
விருப்பு வெறுப்பு அற்றவரும்; (சுக துக்கங்களைச் சமமாகக் கருதுபவர்);
அன்றி -
ஆகியோரைத் தவிர; வேரி ஒளித்தவர் உண்டு - கள்ளை
மறைவாகக் குடித்து; மீண்டு - பின்பு; இவ் உலகு எலாம் உணர - இந்த
உலகத்தவர் அனைவரும் அறியும்படி; ஓடிக்களித்தவர் - ஓடிக் களிப்புக்
கொண்டவர்; எய்தி நின்ற - அடைந்துள்ள; கதி ஒன்று - ஒரு நற்கதியை;
கண்டது உண்டோ -
(யாரேனும்) பார்த்ததுண்டோ?

     அஞ்சி வந்து அடைந்தவரை அபயமென்று காத்தலும் ஐம்பொறிகளை
வசப்படுத்துதலும், தத்துவ அறிவு நிரம்புதலும், சுக துக்கங்களை ஒரு நிகராகக்
கருதுவதும் ஆகிய இவையே நற்கதியடைவதற்குரிய வழிகளாகுமேயல்லாமல்,
கள் குடித்தலால் ஒருகாலும் நற்கதியுண்டாகாது என்பது.  ஐம்பொறிகளை
மனத்தில் அடக்குவது: ஐம்பொறிகளைப் புலன்களின்மேல் செல்லவொட்டாது
தடுத்து வைத்தல்.  வேரி: பாளை முதலியவற்றினின்று குடைந்தெடுக்கப்பட்ட
மது, அஞ்சு - ஐந்து என்பதன் போலி.                              93