4368. | தூய திண் பளிங்கின் செய்த சுவர்களின் தலத்தில், சுற்றில், நாயக மணியின் செய்த நனி நெடுந் தூணின் நாப்பண், சாயை புக்கு உறலால், கண்டோர் அயர்வுற, 'கை விலோடும் ஆயிரம் மைந்தர் வந்தார் உளர்' எனப் பொலிந்தது அவ் ஊர். * |
அவ் ஊர் - அந்தக் கிட்கிந்தா நகரமானது; தூய திண் பளிங்கின் செய்த - தூயஉறுதியான படிகக் கற்களால் செய்யப்பட்ட; சுவர்களின் தலத்தில் - சுவர்களின் இடங்களிலும்; சுற்றில் நாயக மணியின் செய்த - சுற்றுப் புறங்களிலும், சிறந்த நவமணிகள் இழைத்துச் செய்த; நனி நெடுந் தூணின் நாப்பண் - மிக உயர்ந்த தூண்களின் இடையிலும்; சாயை புக்கு உறலால் - (இலக்குவனது) நிழல் சென்று பொருந்துவதால்; கண்டோர் அயர்வுற - பார்த்தவர் யாவரும் மாறாக நினைக்கும்படி; கை விலோடும் - கையில் தாங்கிய வில்லுடனே; ஆயிரம் மைந்தர் - ஆயிரம் வீரர்கள்; வந்தார் உளர் என - வந்துள்ளார்கள் என்று கருதும்படி; பொலிந்தது - விளங்கியது. இலக்குவன் செல்லுகின்ற இடங்களிலுள்ள பளிங்குச் சுவர்களிலும், இரத்தினத் தூண்களிலும் அவனது சாயை ஆயிரக் கணக்காகத் தோன்றியதால், பல வீரர் திரண்டு வந்தார்களோ என்று ஐயுறும்படி அந்த ஊர் விளங்கியது என்பது. நாயகம் - தலைமை.தற்குறிப்பேற்றவணி. 100 |