அமுது உண்ணுமாறு சுக்கிரீவன் கேட்க, இலக்குவன் மறுத்தல் 4379. | 'மஞ்சன விதிமுறை மரபின் ஆடியே, எஞ்சல் இல் இன் அமுது அருந்தின், யாம் எலாம் உய்ஞ்சனம் இனி' என அரசு உரைத்தலும், அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுவான்: |
அரசு - சுக்கிரீவ மன்னன் (இலக்குவனைப் பார்த்து); விதி முறை மரபின் - 'நூல்களில் கூறிய முறைப்படியே; மஞ்சனம் ஆடியே - நீராடி; எஞ்சல் இல் - குறைதல் இல்லாத (சுவையான); இன் அமுது அருந்தின் - இனிய உணவை உண்டால்; யாம் எலாம்- நாங்கள் எல்லாரும்; இனி உய்ஞ்சனம் - நல்வாழ்வு பெற்றவர்களாவோம்; என உரைத்தலும் - என்று சொல்லிய அளவில்; அஞ்சன வண்ணனுக்கு அனுசன் - மையையொத்த கரிய நிறத்தவனான இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவன்; கூறுவான் - சொல்லலானான். 'இலக்குவனே! நீ நீராடி யுணவுண்டால் நாங்கள் உய்வோமெனச் சுக்கிரீவன் முகமன் கூறினான் என்பது. மரபு - இடத்திற்கேற்பது 'அனுசன் - அனுஜன்: பின் பிறந்தவன் எனப் பொருள் தரும் வடசொல். உய்ஞ்சனம் - உய்ந்தனம்: போலி; கால வழுவமைதி. அமுது (உணவு) - உவமையாகு பெயர். 111 |