4386. | 'போயின தூதரின் புகுதும் சேனையை, நீ உடன் கொணருதி, நெறி வலோய்!' என, ஏயினன், அனுமனை, 'இருத்தி ஈண்டு' எனா, நாயகன் இருந்துழிக் கடிது நண்ணினான் |
நெறி வலோய் - (சுக்கிரீவன் அனுமனைப் பார்த்து) நீதி நெறிகளில் வல்லவனே; போயின தூதரின் - (முன்பு கட்டளையிட்ட படி) சென்றுள்ள தூதர்களோடு; புகுதும் சேனையை - இனி வரும் வானர சேனையை; நீ உடன் கொணருதி - நீ உன்னோடு அழைத்து வருக; என - எனவும்; ஈண்டு இருத்தி - (அதுவரை நீ) இங்கேயே இருப்பாய்; எனா - எனவும்;அனுமனை ஏயினன் - அனுமனுக்குக் கட்டளை யிட்டவனாய்; நாயகன் இருந்துழி - தலைவனான இராமன் தங்கியிருந்த இடத்திற்கு; கடிது நண்ணினான் - விரைந்து போகலானான். தூதரின் - உருபு மயக்கம். இருந்த உழி என்பது இருந்துழி எனத் தொக்கு வந்தது. ஏயினன் - முற்றெச்சம். 118 |