இராமன் சுக்கிரீவனை நலன் உசாவுதல் 4395. | தீண்டலும், மார்பிடைத் திருவும் நோவுற, நீண்ட பொன் தடக் கையால் நெடிது புல்லினான்; மூண்டுஎழு வெகுளி போய் ஒளிப்ப, முன்புபோல் ஈண்டிய கருணை தந்து, இருக்கை ஏவியே, |
தீண்டலும் - (சுக்கிரீவன் தன்னை) வணங்கியவுடனே; மார்பிடைத் திருவும் நோவுற - (இராமன் தனது) திருமார்பில் (இடைவிடாது) உறைகின்ற திருமகளும் வருந்தும்படி; நீண்ட பொன் தடக் கையால் - நீண்டு தொங்கும் அழகிய பெரிய கைகளினால்; நெடிது புல்லினான் - அழுந்தத் தழுவியவனாய்; மூண்டு எழு வெகுளி - (சுக்கிரீவன் மேல்) மூண்டெழுந்த கோபமானது; போய் ஒளிப்ப - தணிந்துபோக; முன்புபோல் ஈண்டிய கருணை தந்து - முன்பு போலவே மிக்க அன்பு பாராட்டி; இருக்கை ஏவி - (அந்தச் சுக்கிரீவனை) அமருமாறு பணித்து; இராமனது சினம் கருணையாக மாறியது; சுக்கிரீவனைக் காணும் வரையில் அவன்பால் கொண்டிருந்த சினம் இராமனிடம் குடிகொண்டிருந்தது இங்குக் குறிக்கத்தக்கது. நெடிது புல்லுதல்: காடாலிங்கனமும உயிருறத் தழுவுதலும் ஆகும். 127 |