சுக்கிரீவன் தன் பிழைக்கு வருந்தல்

4397.பொருளுடை அவ் உரை
      கேட்டபோழ்து, வான்
உருளுடைத் தேரினோன்
      புதல்வன், 'ஊழியாய்!
இருளுடை உலகினுக்கு இரவி
      அன்ன நின்
அருளுடையேற்கு அவை
      அரியவோ?' என்றான்.

     பொருளுடை - சிறப்பான பொருள் பொருந்திய; அவ் உரை கேட்ட
போழ்து -
(இராமனது) அந்தச் சொற்களைக் கேட்ட அளவில்; வான உருள்
உடை -
ஆகாயத்தில் செல்லுகின்ற ஒற்றைச் சக்கரத்தையுடைய;
தேரினோன் புதல்வன் - தேரைக் கொண்டவனான சூரியன்
மகனாகிய சுக்கிரீவன்; (இராமனைப் பார்த்து); ஊழியாய் - ஊழிக் காலத்தும்
அழியாது நிலைத்துள்ளவனே!இருள் உடை - இருளையு டைய; உலகினுக்கு
இரவி அன்ன -
உலகத்திற்குக் கதிரவன் போன்ற; நின் அருளுடையேற்கு -
உனது அருளைப் பெற்ற எனக்கு; அவை அரியவோ - அச் செயல்கள்
அருமையானவையோ?என்றான் - என்று கூறினான்.

     சுக்கிரீவன் தன் மனைவியைப் பிரிந்து வாலியினால் துரத்தப்பட்டு
உருசிய முக மலையில் செய்வது இன்னதென்று தெரியாமல் திகைத்து நின்ற
காலத்தில், தன் துயரம் யாவும் ஒருங்கே நீங்குமாறு வந்த இராமனுக்கு, புற
இருள் கவிந்து செய்தொழில் அறியாது மயங்கிக் கிடக்கும் இவ்வுலக
உயிர்களுக்கு அந்த இருளை நீக்குமாறு தோன்றும் கதிரவனை
உவமையாக்கினார்.  உனது கருணையொன்று தானே எனக்கு எல்லாவற்றையும்
இனிது நடத்துகின்றது என்பான் 'நின் அருளுடையேற்கு அவை அரியவோ'
என்றான்.  இத் தொடர்களால், சுக்கிரீவன் இராமனிடம் கொண்ட பக்தியும்,
நயம்பட உரைக்கும் ஆற்றலும் தெளிவாம்.  உருள் - ஒற்றைச் சக்கரம்.
அரியவோ - ஓகாரம் எதிர்மறை.                                  129