4399.'பெருந் திசை அனைத்தையும்
      பிசைந்து தேடினேன்
தரும் தகை அமைந்தும்,
      அத் தன்மை செய்திலேன்;
திருந்திழை திறத்தினால்,
      தெளிந்த சிந்தை நீ,
வருந்தினை இருக்க, யான்
      வாழ்வின் வைகினேன்.

     (பின்னும் இராமனை நோக்கிச் சுக்கிரீவன்); பெருந்திசை அனைத்
தையும் -
பெரிய திக்குகள் எல்லாவற்றையும்; பிசைந்து தேடினேன் -
துருவித் தேடிப் பார்த்து; தரும் தகை - சீதையைக் கொண்டுதரக் கூடிய
திறமை; அமைந்தும் - (என்னிடம்) இருந்தும்; அத் தன்மை செய்திலேன் -
அவ்வாறு செய்யாதவனாய்; திருந்து இழை திறத்தினால் - வேலைப்பாடு
மிக்க அணிகளை அணிந்தவளான சீதையின் பொருட்டு; தெளிந்த சிந்தை
நீ-
இயல்பாகவே கலக்கம் இல்லாமல் தெளிந்த மனமுடைய நீ; வருந்தினை
இருக்க -
வருந்தி இருக்கவும்; யான் - (அதைச் சிறிதும் எண்ணாமல்) நான்;
வாழ்வில் வைகினேன் -
இன்ப வாழ்க்கையில் காலங்கழித்தேன்.

     கலங்காத இராமனது மனம் கலங்கியிருக்க அதைத் தெளிவிக்கும்
வல்லமை தனக்கு இருந்தும் அதற்கேற்ற வழிமுறையும் தேடாது இன்ப
வாழ்வில் பொழுது போக்கியிருந்த தன் பேதைமையைச் சுக்கிரீவன் வெறுத்துக்
கூறுகின்றான் என்பது.  திருந்திழை - சீதை: அன்மொழித் தொகை.       131