4414. | தனி வரும் தடங் கிரி எனப் பெரியவன், சலத்தால் நினையும் நெஞ்சு இற உரும்என உறுக்குறு நிலையன், பனசன் என்பவன் - பன்னிரண்டு ஆயிர கோடிப் புனித வெஞ் சின வானரப் படை கொடு - புகுந்தான். |
தனிவரும் - தனித்து வருகின்ற; தடங்கிரி எனப் பெரியவன் - பெரியமலை போன்ற பெருந் தோற்றத்தையுடையவனும்; சலத்தால் - தணியாதகோபத்தால்; நினையும் நெஞ்சு இற - நினைப்பவர்களின் மனம் உடையும்படி; உரும் என உறுக்குறு நிலையன் - இடி போல (க் கண்டவரை) நடுங்கச் செய்கின்ற தன்மையுமான; பனசன் என்பவன் - பனசன் என்ற வானரத் தளபதி; பன்னிரண்டு ஆயிர கோடி - பன்னிரண்டாயிரங் கோடி என்று சொல்லக் கூடிய; புனிதம் வெம் சினம் - தூய கடுங் கோபமுடைய; வானரம் படை கொடு - வானர சேனையோடு; புகுந்தான் - வந்து சேர்ந்தான். ஒத்தாரோடன்றிப் போர் செய்யாத தன்மையால் சினத்துக்கு வெம்மையுடன் புனிதமும் சேர்த்துக் கூறினார். 8 |