வானர சேனைகளின் ஆற்றலும் சிறப்பும் 4429. | தோயின், ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம்; சாயின், அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும்; ஏயின், மண்டலமும் எள் இட இடம் இன்றி இரியும்; காயின் வெங் கனல்- கடவுளும் இரவியும் கரியும். |
தோயின் - (அங்கே திரண்ட வானர சேனைகள்) படிந்து முழுகினால்; ஆழி ஓர் ஏழும் - ஏழு கடல்களும்; நீர் சுவறி வெண்துகள் ஆம் - நீர் வற்றி வெள்ளை நிறப் புழுதியாக மாறி விடும்; சாயின் - ஒரு பக்கமாகச் சாய்ந்தால்; அண்டமும் மேருவும் - பூமி மண்டலமும் மேரு மலையும்; ஒருங்கு உடன் சாயும் - ஒரு சேர உடனே (அந்தப் பக்கமாகச்) சாய்ந்து விடும்; ஏயின் - எழுந்து உலாவினால்; மண்தலம் - இந்தப் பூமி; எள் இட இடமின்றி இரியும் - எள் இடுவதற்கும் இடம் இல்லாமற்போகும்; காயின் - சினம் கொள்ளுமாயின்; வெங்கனல் கடவுளும் - கொடிய அக்கினிதேவனும்; இரவியும் - சூரியனும்; கரியும் - வெந்து கருகிவிடும். இச் செய்யுள் வானர சேனையின் மிகுதியையும், பெரு வலிமையையும் குறிக்கிறது. இச் செய்யுள் அடிமறிமாற்றுப் பொருள்கோள் அமைப்புடையது. எந்த அடியை எங்கே கூட்டினும் பொருளும் ஓசையும் வேறுபடா. ஏயின் - எழுந்துஉலாவினால். 23 |