4461. | 'நொய்தின், அம் மலை நீங்கி, நுமரொடும் பொய்கையின் கரை பிற்படப் போதிரால்; செய்ய பெண்ணை, கரிய பெண்ணைச் சில வைகல் தேடி, கடிது வழிக்கொள்வீர். |
நொய்தின் - விரைவாக; அம்மலை நீங்கி - அந்த ஏமகூட மலையை விட்டு அகன்று; நுமரொடும் - உங்களைச் சேர்ந்த வானரர் களுடனே; பொய்கையின் கரை - (அங்குள்ள) தடாகத்தின் கரையானது; பிற்படப் போதிர் - பின்னாகும்படி (அதை விட்டு) அப்பாலே செல்லுங்கள்; செய்ய பெண்ணை - (மகளிர்க்குரிய) நற் பண்புகளைக் கொண்ட சீதையை; கரிய பெண்ணை - கரிய பெண்ணை நதியின் இடங்களில்; சில வைகல் தேடி - சில நாட்கள் தேடிப் பார்த்து; கடிது வழிக்கொள்வீர் - விரைந்து மேலே செல்லுங்கள். செய்ய பெண்ணை கரிய பெண்ணை - முரண் தொடை. வைகல் - கழியும் தன்மையுடையது: காரணப்பெயர். நொய்து, கடிது: விரைவுபற்றி வந்த வினையுரிகள். 15 |