4464. | 'ஞாலம் நுங்குறு நல் அறத்தோர் பொருள் போல நின்று பொலிவது, பூம் பொழில்; சீல மங்கையர் வாய் எனத் தீம் கனி காலம் இன்றிக் கனிவது காண்டிரால். |
பூம்பொழில் - மலர்கள் நிறைந்த (முண்டகத்துறை என்னும்) அச் சோலையானது; ஞாலம் நுங்குறும் - உலகத்தவரால் அனுபவிக்கப் படுகிற; நல் அறத்தோர் பொருள் போல - சிறந்த தரும சிந்தையுள்ள வர்களின் செல்வம் போல; நின்று பொலிவது - நிலைபெற்று விளங்குவது; சீல மங்கையர் வாய் என - நல்லொழுக்கமுடைய மாதர்களின் வாயிதழ் போன்று; தீம் கனி - இனிய பழங்கள்; காலம் இன்றிக் கனிவது - (இன்ன காலமென்று இல்லாது) எந்தக் காலத்திலும் பழுக்கப் பெறுவது; காண்டிர் - (அதனைச்) சென்று காணுங்கள். இம் முண்டகத்துறைக் கண்ணுள்ள மரங்களெல்லாம் சிறந்த பயன்மரங்கள் என்பதும், எந்தக்காலத்தும் மாறாது இனிய கனி தருவன என்பதும் குறிக்கப் பெற்றன. ஞாலம் - இடவாகுபெயர். சிறந்த அறச் சிந்தனையுள்ளவர்களின் செல்வம் பெருகி உலகத்துள்ளார்க்கும் பயன்படும். கனிபோன்ற வாய் என்னாமல் மகளிர் வாய் போன்ற கனி என்றது எதிர்நிலையணி. 18 |