4495. | 'பவளமும், கிடையும், கொவ்வைப்பழனும், பைங் குமுதப்போதும், துவள்வுஇல இலவம், கோபம், முருக்கு என்று இத் தொடக்கம், ''சாலத் தவளம்'' என்று உரைக்கும்வண்ணம் சிவந்து, தேன் ததும்பும்ஆயின், குவளை உண் கண்ணி வண்ண வாய் அது; குறியும் அஃதே. |
குவளை உண் கண்ணி - கருங்குவளை போன்ற மைதீட்டப்பட்ட கண்களையுடைய சீதையின்; வண்ண வாய் அது - அழகிய வாயானது; பவளமும் கிடையும் - பவளமும் சிவந்த நெட்டியும்; கொவ்வைப் பழனும் - கொவ்வைக்கனியும்; பைங் குமுதப்போதும் - புதிய செவ்வல்லி மலரும்; துவள்வு இல இலவம் - துவண்டுபோகாத இலவமரத்தின் மலரும்; கோபம் - இந்திரக்கோபப் பூச்சியும்; முருக்கு - கல்யாண முருங்கை மலரும்; என்ற இத் தொடக்கம் - என்று கூறும் இவை முதலான உவமப் பொருள்கள்; சாலத் தவளம் என்று உரைக்கும் வண்ணம் - மிகவும் வெண்ணிறமானவை என்று சொல்லுமாறு; சிவந்து - மிகுதியாகச் செந்நிறம் பெற்று; தேன் ததும்பும் - தேன் நிரம்பியிருக்கும்; ஆயின் - என்றால்; குறியும் அஃது -அதற்கு உவமையாகக் கூறத்தக்க பொருளும் அதுவேயாகும். சீதையின்வாய் பவளம் முதலியவற்றினும் மிகச்சிவந்து தேன் ததும்புவதால், அப் பவளம் முதலியவை சீதையின் வாய்க்கு உவமையாகமாட்டா; அதற்கு அதுவே உவமையாகுமல்லாது வேறு உவமையில்லை என்பது. எதிர்நிலையணியி அங்கமாகக் கொண்டுவந்த இயைபின்மையணி. தேன்: இனிமைக்கு இலக்கணை. இலவ மலர்களின் இதழ்கள் தடித்திருக்குமாதலால் 'துவள்வு இல இலவம்' என்றார். 49 |