4506.'புல்லிதழ் கமலத் தெய்வப்
      பூவிற்கும் உண்டு; பொற்பின்
எல்லையின் மதிக்கும் உண்டாம், களங்கம்
      என்று உரைக்கும் ஏதம்;
அல்லவும் சிறிது குற்றம்
     அகன்றில; அன்னம் அன்ன
நல் இயலாளுக்கு, எல்லாம் நலன்
      அன்றி, பிறிது உண்டாகுமோ?    *

     தெய்வக் கமலப் பூவிற்கும் - தெய்வத் தன்மையுள்ள தாமரைப்
பூவிற்கும்; புல்லிதழ் உண்டு - பயனற்றதான (அதனை மேலே தழுவியுள்ள)
புறவிதழாகிய குற்றமுண்டு; பொற்பின் எல்லையின் மதிக்கும் - அழகின்
வரம்பாகிய சந்திரனுக்கும்; களங்கம் என்று உரைக்கும் ஏதம் -
களங்கமென்று சொல்லுகின்ற குற்றம்; உண்டாம் - உள்ளதாகும்; அல்லவும் -
இவை அல்லாமல் மற்றுமுள்ள சிறந்த பொருள்களும்; சிறிது குற்றம்
அகன்றில -
சிறிதளவாவது  குற்றம் இல்லாமல் இருக்கமாட்டா (ஒவ்வொரு
பொருளுக்கும் ஓரளவாவது குற்றம் உண்டு); அன்னம் அன்ன நல்
இயலாளுக்கு -
அன்னப் பறவை போன்ற அழகிய நடையையுடையவளாகிய
சீதைக்கு; எல்லாம் நலன் அன்றி - முழுவதும் நன்மையேயல்லாமல்; பிறிது
உண்டாமோ -
வேறொன்றாகிய குற்றம் உண்டோ? (இல்லை என்றவாறு).
ஆல் - தேற்றம்.                  

     தாமரைமலர்க்கும் புறவிதழாகிய குற்றமுள்ள; சந்திரனுக்கும் களங்கமாகிய
குற்றம் இருக்கின்றது; இவ்வாறு. பல சிறப்பான குணங்களையுடைய உயர்ந்த
பொருள்களிலும் ஏதேனும் குற்றம் இருத்தல் உலகவியல்பு: ஆனால் இச்
சீதைக்கோ முழுவதும் குணமேயன்றிக் குற்றம் சிறிதுமில்லை என்பது.
எடுத்துக் காட்டுவமையணி.  திருமகள் தன்னிடத்தில் தங்குமாறு நிற்றலால்
தாமரை மலரை 'கமலத் தெய்வப்பூ' என்றார்.  புல்லிதழ் - பண்புத் தொகை.
                                                           60