4507. | 'மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம், வண்ண வாசப் பங்கயத் தவட்கும், - ஐயா! - நிரம்பல; பற்றி நோக்கின், செங் கயல் கருங்கண் செவ் வாய்த் தேவரும் வணங்கும் தெய்வக் கொங்கை அக் குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை; குறியும் அஃதே. |
ஐயா - ஐயா!பற்றி நோக்கின் - ஆராய்ந்துபார்த்தால்; மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் - பெண்களுக்காகக் (அங்க இலக்கண நூலில்) கூறியுள்ள உத்தமவிலக்கணங்கள்; வண்ண வாசப் பங்கயத்த வட்கும் - மணமுள்ள அழகிய தாமரை மலரில் வாழ்பவளான திரு மகளுக்கும்; நிரம்பல - நிரம்ப அமையவில்லை; செங்கயல் கருங்கண் - கயல்மீன்போன்ற அழகிய கருவிழிகளைக் கொண்ட கண்களையும்; செவ் வாய் - சிவந்த வாயையுமுடைய; தேவரும் வணங்கும் - தேவரும் வணங்குதற்கேற்ற சிறப்பு வாய்ந்த; தெய்வக் கொங்கை அக் குயிலுக்கு - தெய்வத் தன்மை கொண்ட முலைகளோடு கூடிய அந்தக் குயில் போன்ற சீதைக்கு; ஒன்றும் குறைவு இலை - (உத்தமவிலக் கணங்களில்) ஒன்றாவது குறைவுபடவில்லை; குறியும் அஃதே - (நீ அவளை அறிவதற்கு) அடையாளமும் அதுவே. சீதை திருமகளைவிட நல்லிலக்கணம் நிரம்பியவள் என்பதாம். நல்லிலக்கணங்களில் ஒன்றும் குறைவில்லாமல் அவ்விலக்கணம் முழுவதும் நிரம்பியிருத்தலால் சீதை 'தேவரும் வணங்குத் தெய்வக் குயில்' எனப்பட்டாள். செங்கயல் கருங்கண் செவ்வாய்: முரண் தொடை. குயில் - உவமவாகுபெயர். பங்கயத்தவட்கும். தேவரும்: உயர்வுசிறப்பும்மைகள். 61 |