4510. | 'பூ வரும் மழலை அன்னம், புனை மடப் பிடி என்று இன்ன; தேவரும் மருளத் தக்க செலவின எனினும் தேறேன்; பா வரும் கிழமைத் தொன்மைப் பருணிதர் தொடுத்த, பத்தி நா அருங் கிளவிச் செவ்வி நடை வரும் நடையள் - நல்லோய்! |
நல்லோய் - நற்பண்புகளால் சிறந்தவனே!பூ வரும் - தாமரைப் பூவில் வாழும் தன்மையுள்ள; மழலை - மழலைச் சொற்களையுடைய; அன்னம் - அன்னப் பறவையும்; புனை மடப் பிடி - அழகிய இளைய பெண் யானையும்; என்ற இன்ன - என்று சொல்லப்பட்ட இவை; தேவரும் மருளத்தக்க செலவின - தேவர்களும் கண்டு திகைக்கக் கூடிய (சிறந்த) நடையையுடையன; எனினும் - என்றாலும்; தேறேன் - (அவற்றைச் சீதையின் நடைக்கு உவமையாகக் கூறத்) தெளிவு கொள்ளேன்; பா வரும் - செய்யுள் இயற்றுவதில் பொருந்திய; கிழமைத் தொன்மைப்பருணிதர் - உரிமையுடைய பழமையான (புலமை மிக்க) புலவர்கள்; தொடுத்த - இயற்றிய; பத்தி - ஒழுங்கான; நா அரும் கிளவி - நாவில் எழுகின்ற அரிய சொற்களையுடைய; செவ்வி நடை வரும் நடையள் - காவியங்களின் அழகிய நடையை ஒத்த நடையையு டையவளாவாள். உலகத்துப் பெண்கள் நடைக்கு உவமையாகக் கூறப்படுகின்ற அன்னப் பறவை முதலியவற்றின் நடையைச் சீதையின் நடைக்கு ஒப்பாகுமென்று நான் சிறிதும் கருதமாட்டேன்; பழைய புலமை மிக்க புலவர்கள் இயற்றியுள்ள காவியங்களின் நடை ஒப்பற்று விளங்குவதுபோல இந்தச் சீதையின் நடையும் ஒப்பற்று விளங்கும் என்பது. நடை வரு நடை - வரு: உவமஉருபு. நூலிலும் நடையுண்டு; பெண்களுக்கும் நடையுண்டு ஆதலால், நூலின் நடை சீதையின் நடைக்கு உவமை கூறப்பட்டது. பருணிதர் - புலவர். 64 |