ஏழுகூட மலையை வானரர் அடைதல்

4531. தாம கூடத் திரைத் தீர்த்த சங்கம் ஆம்,
நாம கூடு அப் பெருந் திசையை நல்கிய,
வாம கூடச் சுடர் மணி வயங்குறும், -
ஏமகூடத் தடங் கிரியை எய்தினார்.

     தாமகூடத் திரைதீர்த்த சங்கம் ஆம் - ஒளியமைந்த சிகரங்களிலி
ருந்து தோன்றுகின்ற அலைகளையுடைய ஆறுகளின் சங்கமம் ஆகிய; நாம
கூடு அப்பெருந் திசையை நல்கிய -
புகழுடன் கூடியதும் பெரியதும் ஆகிய
அத்திசையைப் பாதுகாப்பதாகிய; வாம கூடச் சுடர் மணி வயங்குறும் -
அழகிய தொகுதியாகிய ஒளியையுடைய இரத்தினங்கள் விளங்குகின்ற; ஏம
கூடத் தடங்கிரியை -
ஏமகூடமென்னும் பெரிய மலையை; எய்தினார் -
போய் சேர்ந்தார்கள்.

     பல புண்ணிய ஆறுகளின் சங்கமமும் மிகச் சிறந்த இரத்தினங்களும்
நிரம்பப் பெற்றது ஏமகூடமலை என்பது.  ஏமகூடம் - எட்டுக் குலகிரிகளில்
ஒன்று. மேருவின் தெற்கு இமயத்துக்கப்பால் 9000 யோசனையில் உள்ளது
என்ற அபிதான சிந்தாமணி குறிப்பிடுகிறது.  தாமம் - ஒளி; நாமம் - புகழ்;
வாமம் - அழகு; ஏமம் - பொன். திரிபு என்னும் சொல்லணி இப்பாடலில்
வந்துள்ளது.  முதலடியில் 'கூடம்' சிகரத்தையும், மூன்றாமடியில்
தொகுதியையும் குறித்தது.                                       11