பாலையின் வெம்மை 4542. | புள் அடையா; விலங்கு அரிய; புல்லொடும் கள் அடை மரன் இல; கல்லும் தீந்து உகும்; உள் இடை யாவும் நுண் பொடியொடு ஓடிய; வெள்ளிடை அல்லது ஒன்று அரிது; - அவ் வெஞ் சுரம். |
அவ்வெஞ்சுரம் - அந்தக் கொடிய பாலைவனத்தில்; புள் அடையா - பறவைகள் சென்ற தங்கமாட்டா; விலங்கு அரிய - மிருகங்களும் காண்பதற்கு அரியன; புல்லொடும் கள் உடை மரன் இல - புல்லும் தேன் பொதிந்த மலருடை மரங்களும் அடியோடு இல்லை; கல்லும் தீந்து உகும் - கற்களும் எரிந்து சாம்பலாகிவிடும்; உள் இடை யாவும் - தன்னிடம் பொருந்திய எல்லாப் பொருள்களும்; நுண் பொடியொடு ஓடிய - சிறு துகள்களாக மாறிப் பறப்பதால்; வெள்ளிடை அல்லது - வெற்றிடமல்லது; ஒன்று அரியது - வேறொன்றும் அங்குக் காணப்படாது. அந்தப் பாலைவனத்தில் பறவை முதலியன வருவதுமில்லை; மரஞ்செடி கொடிகளும் வளர்வதுமில்லை; கற்களும் கரிந்து தீய்ந்து போகும்; குறிஞ்சி முதலிய வேற்று நிலங்களிலிருந்து எப்பொருள் வந்தாலும் அவை யாவும் துகளாகப் பறக்கின்ற வெப்பம் நிறைந்த வெற்றிடமாகவேயுள்ளது என்ற அப் பாலைவனத்தின் கொடுமை கூறியவாறு. வெள்ளிடை :வெற்றிடம். 22 |