4543. | நன் புலன் நடுக்குற, உணர்வு நைந்து அற, பொன் பொலி யாக்கைகள் புழுங்கிப் பொங்குவார், தென் புலம் தங்கு எரி நரகில் சிந்திய என்பு இல் பல் உயிர் என, வெம்மை எய்தினார். |
நன்புலன் நடுக்குற - (அங்கே சென்ற வானர வீரர்கள்) நல்ல ஐம்பொறிகளும் நடுங்கவும்; உணர்வு நைந்து அற - அறிவு தேய்ந்து ஒழியவும்; பொன் பொலியாக்கைகள்- பொன் போல விளங்கும் உடல்கள்; புழுங்கிப் பொங்குவார் - வியர்த்து மனம் கொதிப்பவர்களாய்; தென்புலம் தங்கு - தெற்குத் திசையில் இருக்கின்ற; எரி நரகில் - (எமனது); எரியும் நரகத்தில்; சிந்திய - விழுந்து வருந்துகின்ற; என்பு இல் பல் உயிர் என - (எலும்பில்லாத உடம்பையுடைய) புழு முதலான பல உயிர்த்தொகுதிகளைப் போல; வெம்மை எய்தினார் - கொதிப்பையடைந்தார்கள். அங்கே சென்ற வானரர்கள் நிலத்தின் வெம்மையைப் பொறுக்க முடியாமல் புழுத்துடிப்பதுபோலத் துடித்தார்கள் என்பது. வானரர்கள் வெயிலில் துடிப்பதற்கு என்பு இல் பல்லுயிர் துன்பப்படுவதை உவமை கூறினார். தென்புலத்தவன்: எமன். என்பு இல் பல் உயிர்: புழுக்கள். 'என்பிலதனை வெயில்போலக்காயுமே' - குறள்: 77 23 |