4544. நீட்டிய நாவினர்; நிலத்தில் தீண்டுதோறு
ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர்;
காட்டினும் காய்ந்து, தம் காயம் தீதலால்,
சூட்டு அகல்மேல் எழு பொரியின் துள்ளினார்.

     நீட்டிய நாவினர் - (அந்த வானரர்கள் நீர் வேட்கையால்) வெளியே
தொங்கிய நாக்கையுடையவர்களாயினர்; நிலத்தில் தீண்டுதோறு ஊட்டிய -
நிலத்தில் அடிவைக்கும் தோறும் கீழிருந்து தாக்கிய; வெம்மையால் -
வெப்பத்தால்; உலையும் காலினர் - கொப்புளம் கண்ட
அடிகளையுடையவர்களுமாயினர்; காட்டினும் காய்ந்து - அப்
பாலைவனத்தைக் காட்டிலும் மிகுதியாகச் சூடேறி; தம் காயம் தீதலால் -
தங்கள் உடம்பு கரிந்து தீய்ந்ததால்; சூட்டுஅகல்மேல் எழு பொரியின் - சூடு
கொண்ட சட்டியிலிருந்து மேலெழுகின்ற நெற்பொரிகள் போல; துள்ளினார் -
துடித்தார்கள்.

     மிகுந்த நீர் வேட்கையால் நாவை வெளியே நீட்டுதலும்,
பொறுக்கமுடியாத மிக்க வெப்பத்தால் கால்கள் கொப்புளித்தலும் இயல்பு.
நெருப்பினால் வெம்மையடைந்த சட்டியில் நெல் பொரிந்து மேலெழுவது
போல வானரவீரர்கள் பாலைவனத்தின் மிக்க வெம்மையால் துடித்தார்கள்
என்பது உவமையணி.                                           24