4569. | நெறிந்து நிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம் செறிந்து சடை உற்றன தலத்தில் நெறிசெல்ல, பறிந்து வினை பற்று அற, மனப் பெரிய பாசம் பிறிந்து பெயர, கருணை கண்வழி பிறங்க, |
நெறித்து - நெறிப்புக் கொண்டு; நிமிர் - நிமிர்ந்து; கற்றை நிறை - தொகுதியாக நிறைந்த; நெடு நீலம் ஓதி - நீண்ட கருமையான கூந் தலானது; செறிந்து சடை உற்றன - அடர்ந்த சடையாகத் திரண்டு அமைந்ததாகி; தலத்தின் நெறி செல்ல - பூமியிடத்தில் புரளவும்; வினை பறிந்து பற்று அற- நல்வினை, தீவினைகள் ஆகிய இரண்டும் அடியோடு நீங்கவும்; மனப் பெரிய பாசம் - மனத்தில் உண்டாகக் கூடிய பெரிய பாசப்பற்று; பிறிந்து பெயர - விலகியொழியவும்; கருணை கண்வழி பிறங்க - அருளானது விழிகளில் தோன்றி விளங்கவும். வினை முடிபு: செல்ல, பற்றற, பெயர, பிறங்க, என்னும் எச்சங்கள் 50 ஆம் செய்யுளிலுள்ள 'இருந்தனள்' என்பதனையே கொண்டு முடியும். ஞான யோகத்தின்முன் கன்ம வினைகள் தீயின்முன் பஞ்சுபோலாகும் என்பது பற்றி 'வினை பறிந்து பற்றற' எனப்பட்டது. பாசம்: கயிறு - இங்கே உவமையாகு பெயராய் மனத்தைப் பிணிக்கும் பாசமாயிற்று. பூமியிற் கிடந்து புரள்வதெனச் சடைக்கற்றையின் நீளத்ைகை் குறித்தார். அருளைக் கண்ணோட்டம் என்பார். ஆதலால், கருணை கண்வழி பிறங்க என்றார். பிறிந்து: அடியோடும் பெயர்க்கப்பட்டு. எதுகை நோக்கிப் 'பிரிந்து' என்ற சொல் 'பிறிந்து' என்றாயது. 49 |