4578.'நூல்முகம் நுனித்த நெறி
     நூறு வர, நொய்தா
மேல் முகம் நிமிர்த்து,
      வெயில் காலொடு விழுங்கா,
மான் முக நலத்தவன்,
      மயன், செய்த தவத்தால்,
நான்முகன் அளித்துளது, இம்
     மா நகரம் - நல்லோய்!

     நல்லோய் - நற்பண்புள்ளவனே!மான்முக நலத்தவன் மயன் -
மானின் முகம் போன்ற முகத்தையுடைய சிறந்த பண்பாளனான மயன் என்னும்
அசுரத் தச்சன்; நூல்முகம் நுனித்த - யோக நூலில் நுட்பமாகக் குறித்துள்ள;
நெறி நூறு வர -
கணக்கற்ற வழிகள் தன்னிடம் அமையுமாறு; நொய்தா -
எளிதாக; முகம் மேல் நிமிர்த்து - (தனது) முகத்தை மேலே உயர்த்தி
(அண்ணாந்து வானத்தை நோக்கியபடி); வெயில் காலொடு விழுங்கா -
வெயிலையும் காற்றையும் உணவாக உட்கொண்டு; செய்த தவத்தால் -
கடுமையாகச் செய்த தவத்தின் பயனாக; இம்மா நகரம் - இந்தப் பெரிய
நகரமானது; நான்முகன் அளித்துளது - நான்கு முகமுடைய பிரமனால்
(அம்மயனுக்கு) அளிக்கப்பட்டது.

     இந்த நகரம் மயனது தவத்தைக் கண்டு மெச்சிய பிரமனால் அவனுக்குக்
கொடுக்கப்பட்டதாகும் என்பது.  வானத்தை நோக்கி முகத்தை (ஊர்த்துவ
முகம்) அமைத்து, வெயிலையும் காற்றையுமே உட்கொண்டு ஒருவகை யோகத்
தவம் செய்தான், மயன்; இக்கடுந்தவப் பயனாய் நான்முகனிடமிருந்து
இந்நகரத்தை வரமாகப் பெற்றான்.  மயன்: அசுரச் சிற்பி - மானினது முகம்
போன்ற முகமுடையவன்.  மேல்முகம் நிமிர்த்தல்:யோகமுறை.           58