4578. | 'நூல்முகம் நுனித்த நெறி நூறு வர, நொய்தா மேல் முகம் நிமிர்த்து, வெயில் காலொடு விழுங்கா, மான் முக நலத்தவன், மயன், செய்த தவத்தால், நான்முகன் அளித்துளது, இம் மா நகரம் - நல்லோய்! |
நல்லோய் - நற்பண்புள்ளவனே!மான்முக நலத்தவன் மயன் - மானின் முகம் போன்ற முகத்தையுடைய சிறந்த பண்பாளனான மயன் என்னும் அசுரத் தச்சன்; நூல்முகம் நுனித்த - யோக நூலில் நுட்பமாகக் குறித்துள்ள; நெறி நூறு வர - கணக்கற்ற வழிகள் தன்னிடம் அமையுமாறு; நொய்தா - எளிதாக; முகம் மேல் நிமிர்த்து - (தனது) முகத்தை மேலே உயர்த்தி (அண்ணாந்து வானத்தை நோக்கியபடி); வெயில் காலொடு விழுங்கா - வெயிலையும் காற்றையும் உணவாக உட்கொண்டு; செய்த தவத்தால் - கடுமையாகச் செய்த தவத்தின் பயனாக; இம்மா நகரம் - இந்தப் பெரிய நகரமானது; நான்முகன் அளித்துளது - நான்கு முகமுடைய பிரமனால் (அம்மயனுக்கு) அளிக்கப்பட்டது. இந்த நகரம் மயனது தவத்தைக் கண்டு மெச்சிய பிரமனால் அவனுக்குக் கொடுக்கப்பட்டதாகும் என்பது. வானத்தை நோக்கி முகத்தை (ஊர்த்துவ முகம்) அமைத்து, வெயிலையும் காற்றையுமே உட்கொண்டு ஒருவகை யோகத் தவம் செய்தான், மயன்; இக்கடுந்தவப் பயனாய் நான்முகனிடமிருந்து இந்நகரத்தை வரமாகப் பெற்றான். மயன்: அசுரச் சிற்பி - மானினது முகம் போன்ற முகமுடையவன். மேல்முகம் நிமிர்த்தல்:யோகமுறை. 58 |