அனுமன் மறுமொழி

4586.அன்னது சுயம்பிரபை
      கூற, அனுமானும்
மன்னு புலன் வென்று
      வரு மாதுஅவள் மலர்த்தாள்
சென்னியின் வணங்கி, 'நனி
      வானவர்கள் சேரும்
பொன்னுலகம் ஈகுவல், நினக்கு'
      எனல் புகன்றான்.

     சுயம்பிரபை - சுயம்பிரபை; அன்னது கூற - அவ்வாறான சொற்களைச்
சொல்ல; அனுமானும் - அனுமனும்; மன்னு புலன் வென்று வரு -
பொருந்திய ஐம்புலன்களையும் வெற்றி கொண்ட; மாதுஅவள் மலர்த்தாள் -
அந்தப் பெண்ணின் தாமரை மலர் போன்ற அடிகளை; சென்னியின்
வணங்கி-
தலையால் வணங்கி; நினக்கு - உனக்கு; வானவர்கள் நனி
சேரும் -
தேவர்கள் மிகுதியாகக் கூடி நிற்கும்; பொன்னுலகம் ஈகுவல் -
பொன்மயமான தேவருலகத்தை அளிப்பேன்; எனல் புகன்றான் - என்று
சொன்னான்.

     மேலுலக நெறியைக் காட்டுமாறு வேண்டிய சுயம்பிரபைக்கு, அவ்வாறே
செய்வதாக அனுமன் வாக்களித்தான் என்பது.  புலன்களை வென்று தவம்
செய்தவாறு அனுமன், அவள் திருவடியை வணங்கினான்.             66