4598.பிறங்கு பங்கியான்;
      பெயரும் பெட்பினில்
கறங்கு போன்றுளான்,
      பிசையும் கையினான்;
அறம் கொள் சிந்தையார்,
      நெறி செல் ஆய்வினால்
உறங்குவாரை வந்து,
      ஒல்லை எய்தினான்.

    பிறங்கு பங்கியான் - விளங்கும் செம்பட்டை மயிரையுடையவன்;
பெயரும் பெடபினில் -
(தான் நடந்து) செல்லும் தன்மையில்; கறங்கு
போன்று உளான் -
காற்றாடியை யொத்துள்ளவனாய்; பிசையும் கையினான்-
(கோபத்தால்) பிசையும் கைகளையுடையவன்; அறம் கொள் சிந்தையார் -
தரும சிந்தனையுள்வர்களும்; நெறி செல் ஆய்வினால் - வழி நடந்துவந்த
களைப்பினால்; உறங்குவாரை - தூங்குகின்றவர்களுமாகிய அந்த வானர
வீரர்களை; ஒல்லை வந்து எய்தினான் - விரைவில் வந்து சேர்ந்தான்.

     இராமபிரானின் தொண்டில் கருத்தாய்ச் செல்லுவதால் வானரரை
'அறங்கொள் சிந்தையார்' என உயர்த்திக் கூறினார்.  ஆய்வு: நுணுகுதல்
(இளைத்தல்).  கை பிசைதல்: கொடுமைக்குறி. பங்கி: ஆண்பால் தலைமயிர். 5