அங்கதன் மார்பில் அசுரன் கையால் அறைதல்

4599.'பொய்கை என்னது என்று
      உணர்ந்தும், புல்லியோர்
எய்தினார்கள் யார்? இது
      எனா?' எனா
ஐயன் அங்கதன்
      அலங்கல் மார்பினில்,
கையின் மோதினான்; -
      காலனே அனான்.

     காலனே அனான் - யமனைப் போன்றவனாகிய துமிரன் என்ற அந்த
அசுரன்; பொய்கை என்னது என்று உணர்ந்தும் - இந்தத் தடாகம் எனக்கு
உரியது என்று அறிந்தும்; எய்தினார்கள் - இங்கு வந்து சேர்ந்தவர்களாகிய;
புல்லியோர் -
அற்பர்கள்; யார் - யாவர்; ஆ இது என் - ஆ இது என்ன
வியப்பு!எனா - என்று சொல்லிக் கொண்டு; ஐயன் அங்கதன் -
தலைவனான அங்கதனுடைய; அலங்கல் மார்பினில் - மாலையணிந்த
மார்பிலே; கையின் மோதினான் - (தன்) கையினால் அறைந்து தாக்கினான்.

     'இப் பொய்கை எனது என்று யாவருக்கும் தெரிந்திருந்தும் இங்கு வந்து
சேர்ந்தவர்கள் அறிவில்லாதவர்களே; இப்படியும் அறிவில்லாதவர்கள்
இருக்கின்றார்களே' என்று மிக்க செருக்கினால் கூறிக் கொண்டே ஆழ்ந்து
உறங்கும் அங்கதனது மார்பில் ஓங்கியறைந்தனன் துமிரன் என்பது.  ஆ -
வியப்பிடைச் சொல். இது எனா என்பதிலுள்ள ஆகாரம் பிரித்துக்
கூட்டப்பட்டது.                                                  6