அங்கதன் மார்பில் அசுரன் கையால் அறைதல் 4599. | 'பொய்கை என்னது என்று உணர்ந்தும், புல்லியோர் எய்தினார்கள் யார்? இது எனா?' எனா ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில், கையின் மோதினான்; - காலனே அனான். |
காலனே அனான் - யமனைப் போன்றவனாகிய துமிரன் என்ற அந்த அசுரன்; பொய்கை என்னது என்று உணர்ந்தும் - இந்தத் தடாகம் எனக்கு உரியது என்று அறிந்தும்; எய்தினார்கள் - இங்கு வந்து சேர்ந்தவர்களாகிய; புல்லியோர் - அற்பர்கள்; யார் - யாவர்; ஆ இது என் - ஆ இது என்ன வியப்பு!எனா - என்று சொல்லிக் கொண்டு; ஐயன் அங்கதன் - தலைவனான அங்கதனுடைய; அலங்கல் மார்பினில் - மாலையணிந்த மார்பிலே; கையின் மோதினான் - (தன்) கையினால் அறைந்து தாக்கினான். 'இப் பொய்கை எனது என்று யாவருக்கும் தெரிந்திருந்தும் இங்கு வந்து சேர்ந்தவர்கள் அறிவில்லாதவர்களே; இப்படியும் அறிவில்லாதவர்கள் இருக்கின்றார்களே' என்று மிக்க செருக்கினால் கூறிக் கொண்டே ஆழ்ந்து உறங்கும் அங்கதனது மார்பில் ஓங்கியறைந்தனன் துமிரன் என்பது. ஆ - வியப்பிடைச் சொல். இது எனா என்பதிலுள்ள ஆகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. 6 |