4606.துறையும், தோகை நின்று ஆடு சூழலும்,
குறையும், சோலையும், குளிர்ந்த சாரல் நீர்ச்
சிறையும், தெள்ளு பூந் தடமும், தெண் பளிக்கு
அறையும், தேடினார் - அறிவின் நீடினார்.

     அறிவின் நீடினார் - அறிவின் எல்லைகளைக் கண்டவர்களான அவ்
வானர வீரர்; துறையும் - (அந்த நதியின்) இறங்கு துறைகளிலும்; தோகை
நின்று ஆடு சூழலும் -
மயில்கள் (களிப்போடு) நின்று கூத்தாடு கின்ற
இடங்களிலும்; குறையும் - அந்த ஆற்றின் இடையே இருந்த திட்டுக்களிலும்;
சோலையும் -
அநத ஆற்றையடுத்த பூஞ்சோலைகளிலும்; குளிர்ந்த சாரல்
நீர்ச் சிறையும் -
குளிர்ந்த காற்று வீசும் பக்கங்களிலமைந்த நீர்நிலைகளான
ஏரி குளங்களிலும்; தெள்ளு பூந் தடமும் - தெளிவான மலர்கள் நிறைந்த
தடாகங்களிலும்; தெண் பளிக்கு அறையும் - ஒளியுடன் விளங்கிய பளிங்குப்
பாறைகளிலும்; தேடினார் - சீதையைத் தேடினார்கள்.

     தோகை: சினையாகுபெயராய் மயிலைக் குறித்தது.  குறை: ஆற்றிடைத்
திட்டு (தீவு).                                                    13