தண்டக வனத்தில் தேடிப் பார்த்த பின், முண்டகத் துறையை அடைதல் 4611. | அன்ன தன்மையால், அறிஞர் நாடி, அச் செந் நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ, தன்னை எண்ணும் அத் தகை புகுந்துளார் துன்னு, தண்டகம் கடிது துன்னினார். |
அறிஞர் - அறிவாளர்களான அந்த வானர வீரர்; அன்ன தன் மையால் - அவ்விதமாக; நாடி - சீதையை அங்கே தேடிப் பார்த்து; அச் செந்நெல் வேலி சூழ் - செந் நெற் பயிர்கள் விளையும் வயல்கள் சூழ்ந்த; திரு நல் நாடு ஒரீஇ - சிறந்த அழகான அந்த விதர்ப்ப நாட்டை விட்டு நீங்கி; தன்னை எண்ணும் - சீவான்மாவாகிய உயிரின் இயல்பை அறிந்திருக்கின்ற; அத்தகை புகுந்துளார் - அத் தன்மை பொருந்திய வரான முனிவர்கள்; துன்னு தண்டகம் - நிறைந்து வாழும் தண்டகா ரணியத்தை; கடிது துன்னினார் - விரைவாகச் சென்று சேர்ந்தார்கள். தன்னையெண்ணும் அத்தகை புகுந்துளார் சீவான்ம சொரூபத்தை உள்ள படியுணர்ந்து காணவல்ல யோகியர். திருநல்நாடு: கணடார் தங்கியிருந்து வாழ விரும்பும் அழகியநாடு. தண்டக வனம்: இட்சுவாகு வம்சத்தில் தோன்றித் தன் தீய நடத்தையால் நாடு கடத்தப் பெற்ற தண்டகன் என்னும் அரசகுமாரனால் தெற்கே அமைக்கப்பெற்று ஆளப்பெற்றதும், பின்பு சுக்கிராச்சாரியார் சாபத்தால் கொடிய வனமானதும் பல முனிவர்கள் தவ நியமத்தில் வாழ்ந்து வந்ததுமான ஓர் இடம். இவ் வனத்திலேதான் இராமன் சீதையோடும், இலக்குவனோடும் பல ஆண்டுகள்தங்கியிருந்தான். 18 |