4621. | எழுகின்ற திரையிற்று ஆகி, இழிகின்ற மண நீர் யாறு, - தொழுகின்ற சனகன் வேள்வி தொடங்கிய, சுருதிச் சொல்லால் உழுகின்ற பொழுதின், ஈன்ற ஒரு மகட்கு இரங்கி, ஞாலம் அழுகின்ற கலுழி மாரி ஆம் என - பொலிந்தது அன்றே. |
எழுகின்ற திரையிற்று ஆகி - மெலெழுந்து வீசியெறியும் அலை களையுடையதாகி; இழிகின்ற - பெருகி வருகின்ற; மணி நீர் யாறு - (நீலமணி போல) தெளிந்த நீரையுடைய அந்தக் கோதாவரி நதி; தொழு கின்ற சனகன் - யாவராலும் வணங்கப்படுகின்ற பெருமையுள்ள சனக மன்னன்; வேள்வி தொடங்கி - யாகத்தைத் தொடங்கிச் செய்யும் பொருட்டு; சுருதிச் சொல்லால் - வேத மந்திரங்களைச் சொல்லி; உழுகின்ற பொழுதின் - (கலப்பையால்) உழுகின்ற காலத்தில்; ஈன்ற - உழுபடைச்சாலின் வழியே (பூமி) பெற்றெடுத்த; ஒரு மகட்கு - ஒப்பற்ற அந்தச் சீதைக்காக; இரங்கி - (இராவணனால் ஏற்பட்ட துன்பத்திற்கு) மனம் வருந்தி; ஞாலம் - (அவளை ஈன்ற தாயான) பூமிதேவி; அழுகின்ற - அழுவதாலுண்டான; கலுழிமாரி ஆம் என - கலங்கலான கண்ணீர்ப் பெருக்கைப் போல; பொலிந்தது - விளங்கியது. அன்று, ஏ: ஈற்றசைகள். நிறைந்து பெருகக் கூடிய கோதாவரிநதியை பூமி தேவி தான் பெற்ற மகளான சீதைக்கு இராவணனால் நேர்ந்த வருத்தத்திற்காக இரக்கப்பட்டுப் பெருக்கும் கண்ணீர்போலுமென வருணித்தார். தன்மைத் தற்குறிப்பேற்றவணி. சனக மன்னன் அறிவிற் சிறந்த ஞானயோகியாதலால், யோகியர்களும், பெரியோர்களும் தொழுவதற்குரிய சிறப்புப் பெற்றவன்; அதனால் 'தொழுகின்ற சனகன்' எனப்பட்டான். யாகம் செய்பவர் முதலில் வேத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு கலப்பையால் உழுது அங்கு யாகசாலையை அமைப்பது முறையாகும். சீதை : சீதா என்னும் வடசொல் படைச்சால் என்னும் பொருளுடையது; காரணப் பெயர். உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி பொழிகின்ற புவிமடந்தை திருமடந்தை வெளிப்பட்டென. . . . தோன்றினாள் (682) என முன்பு கூறியதை நினைவு கூர்க. கலுழி: கலங்கல் நீர். வினை முடிவு: யாறு பொலிந்தது என இயைத்துப் பொருள் முடிவு கொள்ள வேண்டும். 28 |