4621. எழுகின்ற திரையிற்று ஆகி, இழிகின்ற
      மண நீர் யாறு, -
தொழுகின்ற சனகன் வேள்வி
      தொடங்கிய, சுருதிச் சொல்லால்
உழுகின்ற பொழுதின், ஈன்ற ஒரு
      மகட்கு இரங்கி, ஞாலம்
அழுகின்ற கலுழி மாரி ஆம்
      என - பொலிந்தது அன்றே.

     எழுகின்ற திரையிற்று ஆகி - மெலெழுந்து வீசியெறியும் அலை
களையுடையதாகி; இழிகின்ற - பெருகி வருகின்ற; மணி நீர் யாறு - (நீலமணி
போல) தெளிந்த நீரையுடைய அந்தக் கோதாவரி நதி; தொழு கின்ற சனகன்
-
யாவராலும் வணங்கப்படுகின்ற பெருமையுள்ள சனக மன்னன்; வேள்வி
தொடங்கி -
யாகத்தைத் தொடங்கிச் செய்யும் பொருட்டு; சுருதிச் சொல்லால்
-
வேத மந்திரங்களைச் சொல்லி; உழுகின்ற பொழுதின் - (கலப்பையால்)
உழுகின்ற காலத்தில்; ஈன்ற - உழுபடைச்சாலின் வழியே (பூமி) பெற்றெடுத்த;
ஒரு மகட்கு -
ஒப்பற்ற அந்தச் சீதைக்காக; இரங்கி - (இராவணனால்
ஏற்பட்ட துன்பத்திற்கு) மனம் வருந்தி; ஞாலம் - (அவளை ஈன்ற தாயான)
பூமிதேவி; அழுகின்ற - அழுவதாலுண்டான; கலுழிமாரி ஆம் என -
கலங்கலான கண்ணீர்ப் பெருக்கைப் போல; பொலிந்தது - விளங்கியது.

     அன்று, ஏ: ஈற்றசைகள். நிறைந்து பெருகக் கூடிய கோதாவரிநதியை பூமி
தேவி தான் பெற்ற மகளான சீதைக்கு இராவணனால் நேர்ந்த வருத்தத்திற்காக
இரக்கப்பட்டுப் பெருக்கும் கண்ணீர்போலுமென வருணித்தார்.  தன்மைத்
தற்குறிப்பேற்றவணி. சனக மன்னன் அறிவிற் சிறந்த ஞானயோகியாதலால்,
யோகியர்களும், பெரியோர்களும் தொழுவதற்குரிய சிறப்புப் பெற்றவன்;
அதனால் 'தொழுகின்ற சனகன்' எனப்பட்டான்.  யாகம் செய்பவர் முதலில்
வேத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு கலப்பையால் உழுது அங்கு
யாகசாலையை அமைப்பது முறையாகும். சீதை : சீதா என்னும் வடசொல்
படைச்சால் என்னும் பொருளுடையது; காரணப் பெயர்.  உழுகின்ற
கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி பொழிகின்ற புவிமடந்தை
திருமடந்தை வெளிப்பட்டென. . . . தோன்றினாள் (682) என முன்பு
கூறியதை நினைவு கூர்க.  கலுழி: கலங்கல் நீர். வினை முடிவு: யாறு
பொலிந்தது என இயைத்துப் பொருள் முடிவு கொள்ள வேண்டும்.       28