4635.தெருவின் ஆர்ப்புறும் பல்
      இயம் தேர் மயில்
கருவி மா மழை
      என்று களிப்புறா;
பொருநர் தண்ணுமைக்கு அன்னமும்
      போகலா; -
மருவினார்க்கும் மயக்கம்
      உண்டாம்கொலோ?

     தெருவின் ஆர்ப்புறும் - வீதிகளில் ஆரவாரிக்கின்ற; பல் இயம் - பல
வகை இசைக் கருவிகளின் ஒலிகளை; தேர் மயில் - கேட்டுணர்ந்த மயில்கள்
(அந்த முழக்கத்தை); கருவி மா மழை என்று -மழைக்கு முதற்காரணமாகிய
மேகத்தின் இடியென்ற மயங்கி; களிப்பு உறா - மகிழ்ச்சியடையமாட்டா;
அன்னமும் -
(அங்குள்ள) அன்னப் பறவைகளும்; பொருநர் தண்ணுமைக்கு
-
கூத்தர் முழக்கும் மத்தள வோசை கேட்டு (அதை மேகத்தின் இடியென்று
மயங்கி); போகலா - (அதற்கு அஞ்சி) விலகிச் செல்லமாட்டா; மருவினார்க்கு
-
எப்போதும் கலந்து பழகுகின்றவர்களுக்கு; மயக்கும் உண்டாம் கொலோ -
மன மயக்கம் உண்டாகுமோ? (உண்டாகாது).

     மேகத்தின் இடியோசைகேட்டு மகிழ்ச்சியடைதல் மயில்களுக்கும்,
அஞ்சுதல் அன்னப் பறவைகளுக்கும் இயல்பு.  ஆனால், எப்பொழுதும் அத்
தொண்டை நாட்டு வீதிகளில் விழா நடப்பதால் பலவகை வாத்திய ஓசைகளைக்
கேட்டுப் பழகிய மயில்களுக்கு அந்த ஆரவாரவொலி மகிழ்ச்சியை
உண்டாக்குவதில்லை; அங்குள்ள அன்னப் பறவைகளும் அவ்வாத்திய ஒலி
கேட்டு அஞ்சி அகல்வதில்லை; இதனால் பழக்கமே அவற்றிற்குத் துணிவைத்
தந்தது என்பது.  பொருநர்: கூத்தாடுவோர்.  போர்க்களம் பாடுவோர்,
ஏர்க்களம் பாடுவோரென இரு வகையினர்.  பல் இயம்: தோற் கருவி, துளைக்
கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி எனப் பலவகைப்படும். வேற்றுப்
பொருள் வைப்பணி.                                            42