4636.தேரை வென்று உயர் தெங்க இளம் பாளையை
நாரை என்று இளங் கெண்டை நடுங்குவ;
தாரை வன் தலைத் தண் இள ஆம்பலைச்
சேரை என்று, புலம்புவ, தேரையே.

     தேரை வென்று உயர் - தேர்போல உயர்ந்த (விரிந்த) தலையை
யுடைய; தெங்கு இளம் பாளையை - தென்னை மரத்தின் இளமையான
பாளையை(க் கண்டு); இளங் கெண்டை - கெண்டை மீன் குஞ்சுகள்;  நாரை
என்று நடுங்குவ -
(அது தங்களைக் கொத்தித் தின்ன வரும்) நாரையென்று
நினைத்து அஞ்சி நடுங்கும்; தாரை வன் தலை - கூர் மையான வலிய
நுனியுள்ள; தண் இள ஆம்பலை - அரும்பைக் கொண்ட குளிர்ந்த இளைய
அல்லித் தண்டைக் கண்டு; தேரை - தேரை கள்(தவளைகள்); சேரை
என்று-
(அவை நம்மை விழுங்க வரும்) சாரைப் பாம்பென்று நினைத்து;
புலம்புவ - (அஞ்சி) வாய்விட்டு அலறும்.

     ஏ: ஈற்றசை. விரியாத தென்னம்பாளைகள் நாரைகளையும்,
அரும்புகளையுடைய செவ்வல்லித் தண்டுகள் சாரைப் பாம்புகளையும்
வடிவத்தால் ஒக்கும்: தென்னம் பாளையை இளங்கெண்டை மீன்கள்
நாரையாகவும், செவ்வல்லித் தண்டினைத் தேரைகள் சாரைப் பாம்புகளாகவும்
எண்ணி அஞ்சிப் புலம்பியதாகக் கூறியது மயக்கவணி.  சேரை என்பது சாரை
என வழங்கும்.  தாரை: கூர்நுனி (தார்க் குச்சி என்ற தொடரில் கூர்மை என்ற
பொருளில் வருவது காண்க).                                     43