4642. | பூ நெருங்கிய புள் உறு சோலைகள் தேன் ஒருங்கு சொரிதலின், தேர்வு இல, மீன் நெருங்குறும் வெள்ளம் வெரீஇ, பல வானரங்கள் மரங்களின் வைகுமால். |
பூ நெருங்கிய - மலர்களில் படிந்து மொய்க்கின்ற; புள் உறு சோலைகள் - வண்டுகள் மிகுதியாகப் பொருந்திய சோலைகள்; தேன் ஒருங்கு சொரிதலின் - தேனை மிகுதியாகப் பொழிவதால் (அந்தத் தேனின் பெருக்கைக் கண்டு); பல வானரங்கள் - (அச் சோலையில் வாழும்) பல குரங்குகள்; தேர்வு இல - (உண்மையை) ஆராயாமல்; மீன் நெருங்குறும் - மீன்கள் நிறைந்துள்ள; வெள்ளம் வெரீஇ - நீர் வெள்ளமென்று அச்சமுற்று; மரங்களின் வைகும் - (கீழே இறங்காமல்) மரக் கிளைகளிலேயே தங்கியிருக்கும். ஆல்: ஈற்றசை. சோலைகளிலுள்ள மலர்கள் தேனை மிகுதியாகச் சொரிவதால் அந்தத் தேனின்பெருக்கை நீர்வெள்ளமென்று தவறாகக் கருதி அச்சப்பட்டு அங்குள்ள வானரங்கள் யாவும் தரையில் இறங்காமல் மரங்களிலேயே தங்கும் என்பது மயக்கவணி. தேன்மிகுதி பெறப்படுவதால் வீறுகோளணி. வெருவி என்ற எச்சம் வெரீஇ யெனத் திரிந்தது - சொல்லிசையளபெடை. 49 |