4643. தாறு நாறுவ, வாழைகள்; தாழையின்
சோறு நாறுவ, தூம்புகள்; மாங்கனி
நாறு நாறுவ; நாறு வளர்க்குறும்
சேறு நாறுவ, செங்கழுநீர்அரோ.   *

     வாழைகள் - வாழை மரங்கள்; தாறு நாறுவ - குலைகள்தள்ளி மணம்
பரப்புவன; தூம்புகள் - மூங்கில்கள்; தாழையின் சோறு - தாழை மலர்களின்
சுண்ணப் பொடிகள் படியப் பெற்று; நாறுவ - அந்த மணத்தையே
வீசுவன; மாங்கனி - மாம்பழங்களின் நறுமணம்; நாறு நாறுவ -
நாற்றுகளில் கமழ்வன; நாறு வளர்க்குறும் சேறு - அந்த நாற்றை
வளரச் செய்யும் சேறு; செங்கழு நீர் நாறுவ - (அங்கே மலர்ந்துள்ள)
செங்கழு நீர்ப் பூக்களின் நறுமணத்தையே பரப்புவன.

     அரோ: ஈற்றசை. தாழை மரமும் மூங்கிலும் ஒன்றற்கு ஒன்று
பக்கத்திலிருப்பதால் தாழை மலரின் சுண்ணப் பொடிகள் படியப் பெற்று
மூங்கில்கள் அந்த மணத்தை வீசுமாறும், நாற்றுகள் நன்றாக வளரப் பெற்ற
நாற்றங்கால் செங்கழு நீர்மலரின்நறுமணத்தைப் பெறுமாறும் பெருமை
வாய்ந்தது சோழநாடு என்பது.                                    50