சோழ நாடும் மலை நாடும் கடந்து பாண்டி நாடு அடைதல் 4644. | அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ, மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம் வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்; இனிய தென் தமிழ் நாடு சென்று எய்தினார். |
வினையின் நீங்கிய பண்பினர் - தீவினைகளிலிருந்து நீங்கிய நற் குணமுடைய வானர வீரர்கள்; அனைய - அத்தகைய வளங்கள் நிறைந்த; பொன்னி அகல் புனல் நாடு - காவிரிநதி பாயும் அகன்ற நீர்வளமிக்க சோழநாட்டை; ஒரீஇ - விட்டு நீங்கி; மனையின் மாட்சி குலாம் - இல்லறச் சிறப்புக்கள் மிகுந்து விளங்கும்; மலை மண்டலம் - மலைநாடாகிய சேர நாட்டை; மேயினார் - சேர்ந்தவர்களாகி (அதையும் நீங்கி); இனிய தென் தமிழ்நாடு - இனிமையான தமிழ் வழங்கும் தமிழ் நாடாகிய பாண்டி மண்டலத்தை; சென்று எய்தினார் - போய்ச் சேர்ந்தார்கள். காவிரியாறு பாய்ந்து செழுமை வாய்த்துள்ளதால் சோழநாடு 'புனல் நாடு' என்ற பெயருடன் விளங்குகிறது. சேர நாட்டவர் இல்லறவொழுக்கத்தில் தவறாது நடப்பவராதலால் அதற்கு 'மனையின் மாட்சி குலாம்' என்று அடைமொழி கொடுக்கப் பெற்றது. மலை மண்டலம்: மலைநாடு; சேரநாடு. செந்தமிழ்நாடு : பாண்டிநாடு. 51 |