4654.'   ''நாடி நாம் கொணருதும்,
      நளினத்தாளை, வான்
மூடிய உலகினை முற்றும்
      முட்டி'' என்று
ஆடவர் திலகனுக்கு
      அன்பினார் எனப்
பாடவம் விளம்பினம்;
      பழியில் மூழ்குவோம்.

     நாம் - (அங்கதன் வானரர்களை நோக்கி) நாம் எல்லோரும்; வான்
மூடிய உலகினை -
வானத்தினால் கவியப் பட்ட உலகத்தை; முற்றும் முட்டி
நாடி -
முழுவதும சென்று தேடிப் பார்த்து; நளினத் தாளை - தாமரை
மலரில் வாழும் திருமகளான சீதையை; கொணருதும் என்று - மீட்டு
வருவதற்குரிய செய்தியைக் கொண்டு வருவோம் என்று; ஆடவர்
திலகனுக்கு-
ஆண்களில் திலகம் போன்ற இராமனுக்கு; அன்பினார்
என -
அன்புடையவர் போல; பாடவம் விளம்பினம் - நம் வல்லமையைக்
கூறினோம்; பழியில் மூழ்குவாம் - ஆனால் இப்பொழுதோ நாம்
தீராப்பழிக்கே உள்ளாகிவிட்டோம்.

     சீதையைத் தேடுமாறு நம்மை அனுப்பிய காலத்தில் இராமனிடத்துப்
பத்தியுடையவர்போல நடித்துச் செயலை முடித்தே தீர்வோமென்று
வல்லமையாகக் கூறியது இப்போது நமது பழிப்புக்கே காரணமாம் என
அங்கதன் கூறினான் என்பது.  ஆடவர் திலகன்: திலகம் நெற்றிக்கு
விளக்கத்தைச் செய்வதுபோல ஆடவர்களுக்கு விளக்கம் செய்பவன் இராமன்
என்பது குறிப்பு.  பாடவம்: வீண் பெருமை, வல்லமை.                 7