4654. | ' ''நாடி நாம் கொணருதும், நளினத்தாளை, வான் மூடிய உலகினை முற்றும் முட்டி'' என்று ஆடவர் திலகனுக்கு அன்பினார் எனப் பாடவம் விளம்பினம்; பழியில் மூழ்குவோம். |
நாம் - (அங்கதன் வானரர்களை நோக்கி) நாம் எல்லோரும்; வான் மூடிய உலகினை - வானத்தினால் கவியப் பட்ட உலகத்தை; முற்றும் முட்டி நாடி - முழுவதும சென்று தேடிப் பார்த்து; நளினத் தாளை - தாமரை மலரில் வாழும் திருமகளான சீதையை; கொணருதும் என்று - மீட்டு வருவதற்குரிய செய்தியைக் கொண்டு வருவோம் என்று; ஆடவர் திலகனுக்கு- ஆண்களில் திலகம் போன்ற இராமனுக்கு; அன்பினார் என - அன்புடையவர் போல; பாடவம் விளம்பினம் - நம் வல்லமையைக் கூறினோம்; பழியில் மூழ்குவாம் - ஆனால் இப்பொழுதோ நாம் தீராப்பழிக்கே உள்ளாகிவிட்டோம். சீதையைத் தேடுமாறு நம்மை அனுப்பிய காலத்தில் இராமனிடத்துப் பத்தியுடையவர்போல நடித்துச் செயலை முடித்தே தீர்வோமென்று வல்லமையாகக் கூறியது இப்போது நமது பழிப்புக்கே காரணமாம் என அங்கதன் கூறினான் என்பது. ஆடவர் திலகன்: திலகம் நெற்றிக்கு விளக்கத்தைச் செய்வதுபோல ஆடவர்களுக்கு விளக்கம் செய்பவன் இராமன் என்பது குறிப்பு. பாடவம்: வீண் பெருமை, வல்லமை. 7 |