4662. | 'பரதனும், பின்னுளோனும், பயந்தெடுத்தவரும், ஊரும், சரதமே முடிவர்; கெட்டேன்! ''சனகி'' என்று உலகம் சாற்றும் விரத மா தவத்தின் மிக்க விளக்கினால், உலகத்து யார்க்கும் கரை தெரிவு இலாத துன்பம் விளைந்தவா!' எனக் கலுழ்ந்தான். |
பரதனும் - பரதனும்; பின் உளோனும் - (அவனுக்குப் பின் பிறந்தவனான) சத்துருக்கனனும்; பயந்து எடுத்தவரும் - (இராமன் முதலிய நால்வரையும்) பெற்றெடுத்த தாய்மார் (கோசலை, சுமித்திரை, கைகேயி ஆகிய) மூவரும்; ஊரும் - அந்த அயோத்தி நகர மக்களும்; சரதமே முடிவர் - மெய்யாகவே இறப்பார்கள்; கெட்டேன் - ஆ! கெடுவேன்; சனகி என்று உலகம் சாற்றும் - சீதை என்று உலகத்துச் சான்றோர் பாராட்டிக் கூறும்; விரத மா தவத்தின்மிக்க - விரதத்தோடு கூடிய பெருந்தவத்தால் மேம்பட்ட; விளக்கினார் - விளக்குப் போன்றவளான ஒரு மகளால்; உலகத்து யார்க்கும் - உலகத்திலுள்ள எவர்க்கும்; கரை தெரிவு இலாத துன்பம் - கரைகாண முடியாத பெருந்துன்பம்; விளைந்த ஆ - வந்து சேர்ந்ததே; என - என்று சொல்லி; கலுழ்ந்தான் - (அங்கதன்) கலங்கி வருந்தினான். ஊர்: இடவாகுபெயர். சீதை பிறந்த குலத்திற்கும் புகுந்த குலத்திற்கும் விளக்கம் செய்பவளாதாலால் அவளை விளக்கு என்றார். கெட்டேன் : இரக்கக் குறிப்பையுணர்த்துவது. ஆ: இங்கே இரக்கத்தையும் வியப்பையும் உணர்த்தி நின்றது. இச் செய்யுள் உணர்த்தும் அவலச் சுவை காண்க. 15 |