கலிவிருத்தம்

4664. 'நீயும் நின் தாதையும் நீங்க, நின் குலத்
தாயம் வந்தவரொடும் தனையர் இல்லையால்;
ஆயது கருதினம்; அன்னது அன்று எனின்,
நாயகர் இறுதியும் நவிலற்பாலதோ?

     நீயும் நின் தாதையும் நீங்க - நீயும் உன் தந்தையான சுக்கிரீவனும்
தவிர; நின்குலத் தாயம் வந்தவரொடும் - உன் குலத்தில் உரிமையுடை
யவராய்ப் பிறந்தவர்க்கு; தனையர் இல்லை - வேறு ஒரு மகன் இல்லை;
ஆயது கருதினம் -
(அது கருதியே) நீ உயிர் நீங்காது சுக்கிரீவனைச்  சேர்க
என்று கூறினோம்; அன்னது அன்று எனில் - அவ்வாறு இல்லாவிட்டாலும்;
நாயகர் இறுதியும் -
(நம்) தலைவர்களின் மரணமும்; நவிலற் பாலதோ -
(நாம்) பேசத் தக்கது ஆகுமோ? (தகாது).

     உங்கள் அரச மரபில் இப்போது வேறு புதல்வர் இல்லாததாலும்,
எங்களைப் போன்ற எளியவரது மரணமின்றி உங்களைப் போன்ற இளவரசர்
மரணம் குறித்து வாயினாற் சொல்லுதலும் கூடாதாதலாலும் நீ உயிர்விடுவேன்
என்று கூறுவது சிறிதும் தகாது; ஆதலால் நாங்களெல்லாரும் உயிர் நீங்க, நீ
சுக்கிரீவனைச் சென்ற சேர்வாய் என்பது. தாயம்: சொத்திலுள்ளஉரிமை.   17