4668.'நாடுதலே நலம் இன்னும்; நாடி, அத்
தோடு அலர் குழலிதன் துயரின் சென்று, அமர்
வீடிய சடாயுவைப் போல வீடுதல்
பாடவம்; அல்லது பழியிற்று ஆம்' என்றான்.

     இன்னும் நாடுதலே நலம் - இனிமேலும் சீதையைத் தேடிப் பார்த்தலே
நற்செயலாகும் (ஆதலால்);  நாடி - நாம் தேடியும் (அச்சீதையைக்
காணா விட்டால்); அத்தோடு அலர் குழலிதன் - இதழ்களையுடைய பூக்கள்
பொலிந்த கூந்தலையுடைய சீதையின்; துயரின் சென்று - (இராவணனால்
நேர்ந்த) துன்பத்திற்காக (அவளைக் காக்க) எதிரே போய்; அமர் வீடிய -
அதனால் ஏற்பட்ட போரில் உயிர்மாய்ந்த; சடாயுவைப் போல - சடாயுவைப்
போல; வீடுதல் - (நாமும் சீதையைத் தேடும் செயலில்) உயிர் விடுதல்;
பாடவம் -
பெருமையாகும்; அல்லது - அப்படிச் செய்யாது நீங்கள்
கருதியபடி இப்போதே உயிரை விடுவது; பழியிற்று ஆம் - பழிக்கு
இடமாகும்; என்றான் - என்று கூறினான்.

     நம்மால் முடிந்தவரை எல்லாவிடங்களிலும் சீதையைத் தேடிப் பார்த்தும்
அவள் அகப்படாவிட்டால் அப்போது நாம் உயிர்விடுவது
சிறந்ததாகுமேயல்லாமல் இப்பொழுதே உயிர்விடுவோமென்பத தக்கதாகாது
என்று அனுமன் அவ் வானரர்களிடம் கூறினான்.

     தோடலர் குழலி: அன்மொழித் தொகை. பாடவம்: பெருமை.        21