சடாயுவைக் கொன்றவர் யார் எனச் சம்பாதி வினவுதல்

4676.நோக்கினன், நின்றனன்,
      நுணங்கு கேள்வியான்,
வாக்கினால் ஒரு
      மொழி வழங்குறாதமுன்,
'தாக்க அருஞ் சடாயுவைத்
      தருக்கினால் உயிர்
நீக்கினர் யார்? அது
     நிரப்புவீர்!' என்றான்.

     நோக்கினன் நின்றனன் - (சம்பாதியின் வருகையை) நோக்கி எதிர்
நின்றவனும்; நுணங்கு கேள்வியான் - நுட்பமான கல்வி
கேள்விகளையுடையவனுமாகிய அனுமன்; வாக்கினால் ஒரு மொழி - தன்
வாயினால் ஒரு சொல்; வழங்குறாதமுன் - சொல்வதற்கு முன்னமே (சம்பாதி);
தாக்க அருஞ் சடாயுவை -
யாரும் எதிர்த்துப் போர் செய்ய முடியாத
வலிமையிடைய சடாயுவை; தருக்கினால் - சூரத்தனத்தால்; உயிர் நீக்கினர்
யார் -
உயிரைப் போக்கியவர் யார்? அது நிரப்புவீர் - அதை விரிவாக
எடுத்துக் கூறுங்கள்; என்றான் - என்று கேட்டுக் கொண்டான்.

     நிரப்புவீர்: அனுமன் ஒருவனை உயர்வு கருதிப் பன்மையில் கூறியது
என்றும், அங்கிருந்த மற்ற வானர வீரர்களை உளப்படுத்தியது என்றும்
கொள்ளலாம்.  நிரப்புதல்: குறையின்றி முழுவதும் கூறல்.          29