சம்பாதியின் வினாவும் அனுமனின் விடையும்

4686.தேற்றத் தேறி இருந்த செங்கணான்,
'கூற்று ஒப்பான், கொலை வாள் அரக்கனோடு
ஏற்று, போர் செய்தது என் நிமித்து?' என,
காற்றின் சேய் இது கட்டுரைக்குமால்;

     தேற்றத் தேறி இருந்த செங்கணான் - (அனுமன்) தேறுதல் மொழி
கூறியதனால் மனந் தெளிந்த சிவந்த கண்களையுடைய அந்தச் சம்பாதி; கூற்று
ஒப்பான் -
யமன் போன்று வலிமையுடைய சடாயு; கொலை வாள்
அரக்கனோடு -
கொலை புரியும் வாளையுடைய அரக்கனாகிய
இராவணனோடு; ஏற்று - எதிர் நின்று; போர் செய்தது - போர்
செய்ததற்கு; என் நிமித்து என - காரணம் என்ன என்று வினாவ; காற்றின்
சேய் -
வாயு குமாரனான அனுமன்; இது கட்டுரைக்கும் - பின்வரும்
செய்திகளைக் கூறலானான்.

     ஆல்: ஈற்றசை.

     சம்பாதி அனுமன் தேறுதல்மொழியால் மனந் தெளிந்து, சடாயு
இராவணனோடு போர் செய்த காணத்தை வினாவ, அனுமன் கூறமுற்பட்டான்.
நிமிர்ந்து: நிமித்தம் (காரணம்).  செங்கணான்: கண்கள் சிவந்தமை துயரத்தால்
கலங்கியதாலாகும்.                                             39