சம்பாதி தன் முன்னை வரலாறு உரைத்தல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்.

4700.'தாய் எனத் தகைய நண்பீர்!
      சம்பாதி, சடாயு, என்பேம்;
சேயொளிச் சிறைய வேகக்
      கழுகினுக்கு அரசு செய்வேம்;
பாய் திரைப் பரவை ஞாலம்
      படர் இருள் பருகும் பண்பின்
ஆய் கதிர்க் கடவுள் தேர்ஊர்
      அருணனுக்கு அமைந்த மைந்தர்;

     தாய் எனத்தகைய நண்பீர் - அன்பு காட்டுவதில் தாய் என்று
சொல்லத்தக்க நண்பர்களே!பாய்திரைப் பரவை ஞாலம் - வீசும்
அலைகளையுடைய கடலால் சூழப் பெற்ற நிலவுலகத்தில்; படல் இருள்
பருகும் பண்பின் -
பரவிய இருட்டை விழுங்கும் (போக்கும்) தன்மையுடைய;
ஆய் கதிர்க் கடவுள் -
சிறந்த கதிர்களோடு கூடிய சூரிய தேவனது; தேர்
ஊர் -
தேரைச் செலுத்தும் சாரதியான; அருணனுக்கு - அருணனுக்கு;
அமைந்த மைந்தர் -
பிறந்த மக்களாகிய; சம்பாதி சடாயு என்பேம் -
சம்பாதி சடாயு என்ற நாங்கள் இருவரும்; சேய் ஒளிச்சிறைய - அழகிய
நிறத்தைக் கொண்ட சிறகுகளையுடை; வேகக் கழுகினுக்கு - வேகமாகப்
பறக்கும் கழுகுகளுக்கு; அரசு செய்வேம் - அரசராக இருந்து ஆட்சி
செய்தவர்கள்.

     கதிரவனின் சாரதியாகிய அருணனுக்கு மக்களாகப் பிறந்த சம்பாதி சடாயு
என்ற நாங்கள் வானத்தில் உயரப் பறக்கும் இயல்புடைய கழுகுகளுக்
கெல்லாம் அரசராக விருந்தோம் என்று சம்பாதி கூறினான் என்பது.

     அருணன்: சூரியனுக்குச் சாரதி; காசியப முனிவன் மனைவியான
விநதையின் வயிற்றில் பிறந்தவன்; கருடனுக்குத் தமையன்; இடைக்குக் கீழே
உறுப்பில்லாதவன். இச்செய்யுள் முதல் 4706 ஆம் செய்யுள் முடிய உள்ள ஏழு
பாடல்களை ஐந்து சீர் கொண்டவையாகப் பிரித்துக் கலித்துறை என்றும்
கொள்வர்.

     நண்பீர்: ஈர் - முன்னிலைப் பன்மை விகுதி.                    53