4706. | 'பாகு ஒன்று குதலையாளைப் பாதக அரக்கன் பற்றிப் போகின்ற பொழுது கண்டேன்; புக்கனன் இலங்கை; புக்கு, வேகின்ற உள்ளத்தாளை வெஞ் சிறையகத்து வைத்தான்; ஏகுமின் காண்டிர்; ஆங்கே இருந்தனள் இறைவி, இன்னும். |
பாகு ஒன்று குதலையாளை - சர்க்கரைப் பாகு போன்ற மழலைச் சொற்களையுடைய சீதையை; பாதக அரக்கன் - கொடிய அரக்கனான இராவணன்; பற்றிப் போகின்றபொழுது - கவர்ந்து செல்லுகின்ற போது; கண்டேன் - (நான்) பார்த்தேன்; இலங்கை புக்கனன் - (அவன்) இலங்கையிற் போய்ச் சேர்ந்தான்; புக்கு - (அங்குச்) சென்று ; வேகின்ற உள்ளத்தாளை - தவிக்கின்ற மனமுடைய அந்தச் சீதையை; வெஞ்சிறை யகத்து வைத்தான் - கொடிய சிறைக் காவலில் வைத்துவிட்டான்; இறைவி - தலைவியான சீதை; இன்னும் ஆங்கே இருந்தனள் - இப்பொழுதும் அங்கேதான் இருக்கின்றாள்; ஏகுமின் காண்டிர்- (நீங்கள்) அங்கே சென்று காணுங்கள். ஏகுமின் - முற்றெச்சம். 59 |