4708.'நான்முகத்து ஒருவன், மற்றை நாரி
      ஓர் பாகத்து அண்ணல்,
பால்முகப் பரவைப் பள்ளிப்
      பரம்பரன், பணி என்றாலும்,
காலனுக்கேயும், சேறல் அரிது;
      இது காவல் தன்மை;
மேல் உமக்கு உறுவது எண்ணிச்
      செல்லுமின்; - விளிவு இல் நாளீர்!

     நான்முகத்து ஒருவன் - (நான்கு திசைகளையும் நோக்க) நான்கு
முகங்களைக் கொண்ட பிரமதேவன்; மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் -
மற்றொரு மூர்த்தியான பார்வதியை இடப்பாகத்திற் கொண்ட சிவன்; பால்முகப்
பரவை -
பாலைத் தன்னிடங் கொண்டுள்ள திருப்பாற் கடலில்; பள்ளிப்
பரம்பரன் பணி என்றாலும் -
பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டுள்ள
சிறந்த திருமால் ஆகியோரின் பொருட்டுச் செய்யும் வேலையை யாயினும்;
காலனுக்கேயும் -
(அவ்வளவு ஏன்) யமனுங் கூட; சேறல் அரிது - (அந்தப்
பணியை நிறைவேற்றிட) உள்ளே புகுந்து செல்லுதல் என்பது முடியாததாகும்;
இது காவல் தன்மை -
(ஏனெனில்) இது (இலங்கையின்) கட்டுக் காவல்
தன்மையாகும்; விளிவு இல் நாளீர் - அழிவில்லாத நீண்ட ஆயுட்
காலத்தையுடையவர்களே!மேல் உமக்கு உறுவது - இனிமேல், உங்களுக்கு
நேரக் கூடியவற்றை; எண்ணிச் செல்லுமின் - முன்னரே ஆராய்ந்து பார்த்துச்
செல்லுங்கள்.

     மும்மூர்த்திகளின் பொருட்டுச் செய்யும் பணியாக இருப்பினும் அதனைச்
செய்து முடிப்பதற்காக இலங்கைக்குள் புகுவது இயமனுக்குக் கூட முடியாது.
ஆகவே, இது பற்றி முன்னரே ஆராய்ந்து முடிவெடுத்துத் தக்கவாறு
செய்யுங்கள் என்றான் சம்பாதி.                                    61