அனுமன் மயேந்திர மலையின் உச்சிக்குச் செல்லுதல்

4735.'ஈண்டு இனிது உறைமின், யானே
     எறி கடல் இலங்கை எய்தி,
மீண்டு இவண் வருதல்காறும்; விடை
      தம்மின், விரைவின்' என்னா
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த,
      அலர் மழை அமரர் தூவ,
சேண் தொடர் சிமயத் தெய்வ
      மயேந்திரத்து உம்பர்ச் சென்றான்.

     யான் - நான்; எறி கடல் இலங்கை எய்தி - அலைவீசும் கடலால்
சூழப் பெற்ற இலங்கை நகரையடைந்து; மீண்டு இவண் வருதல் காறும் -
இங்கே திரும்பி வருகின்ற வரையிலும்; ஈண்டு  இனிது உறைமின் - (நீங்கள்)
இந்த இடத்தில் தங்கியிருங்கள்; விரைவின் விடை தம்மின் - (எனக்கு
விரைவிலே விடை கொடுங்கள்; என்னா - என்று சொல்லி; (அனுமன்);
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த -
அப்பொழுது அந்த வானர வீரர்கள்
மகிழ்ந்து வாழ்த்துக் கூறவும்; அமரர் அலர் மழை தூவ - தேவர்கள் பூமாரி
பொழியவும்; சேண் தொடர் சிமயத் தெய்வ மயேந்திரத்து -
வானத்தையளாவிய சிகரங்களையுடைய தெய்வத் தன்மையுள்ள
மகேந்திரமலையினது; உம்பர்ச் சென்றான் - உச்சிக்குப் போய்ச் சேர்ந்தான்.

     உறைமின், தம்மின்: முன்னிலைப் பன்மை வினை முற்றுக்கள்.     25