4738. | பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க, உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி, ஊழின் நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான்; மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான். |
பகு வாய மடங்கல் வைகும் - திறந்த வாயையுடைய ஆண்சிங்கங்கள் வாழ்கின்ற; படர் வரை முழுதும் - பரந்துள்ள அந்த மகேந்திர மலை முழுவதும்; மூழ்க - (அனுமனது பாரம் அழுத்துதலால்) கீழேயழுந்தவும்; ஊழின் நெகு வாய - வரிசையாகத் தோன்றும் சிதைந்த இடங்களையுடைய; சிகர கோடி - அந்த மலையின் சிகரங்கள் பலவும்; நெரிவன தெரிய - நெரிந்து பொடியாக; விடம் உகுவாய கொள் நாகத்து ஒத்த - நஞ்சைக் கக்குகின்ற வாயையுடைய பாம்பினைப் போன்ற; வால் சுற்றி - வாலினால் (தன்னுடம்பைச் சுற்றிக் கொண்டு); நின்றான் - (பேருருவத்தோடு) நின்றவனாகிய அனுமன்; மக ஆமை முதுகில் தோன்றும் - திருமாலாகிய பெரிய ஆமை முதுகின்மேல் விளங்கித் தோன்றிய; மந்தரம் எனலும் ஆனான் - மந்தரமலை என்று சொல்லத்தக்கவனுமானான். அனுமன் உடற்சுமையால் தரையில் அழுந்துகின்ற மகேந்திரமலை - கூர்மாவதார ஆமைக்கும் மகேந்திரமலையில் நின்ற அனுமன் - பெரிய கூர்மத்தால் தாங்கப்பெற்ற மந்தரமலைக்கும், அனுமனது உடலைச் சுற்றிய அவனது வால் - மந்தர மலையைச் சுற்றிய வாசுகிக்கும் ஒப்பாயின என்றார். 28 |