4738.பகு வாய மடங்கல் வைகும்
      படர் வரை முழுதும் மூழ்க,
உகு வாய விடம் கொள் நாகத்து
      ஒத்த வால் சுற்றி, ஊழின்
நெகு வாய சிகர கோடி
      நெரிவன தெரிய நின்றான்;
மக ஆமை முதுகில் தோன்றும்
      மந்தரம் எனலும் ஆனான்.

     பகு வாய மடங்கல் வைகும் - திறந்த வாயையுடைய ஆண்சிங்கங்கள்
வாழ்கின்ற; படர் வரை முழுதும் - பரந்துள்ள அந்த மகேந்திர மலை
முழுவதும்; மூழ்க - (அனுமனது பாரம் அழுத்துதலால்) கீழேயழுந்தவும்;
ஊழின் நெகு வாய -
வரிசையாகத் தோன்றும் சிதைந்த இடங்களையுடைய;
சிகர கோடி -
அந்த மலையின் சிகரங்கள் பலவும்; நெரிவன தெரிய -
நெரிந்து பொடியாக; விடம் உகுவாய கொள் நாகத்து ஒத்த - நஞ்சைக்
கக்குகின்ற வாயையுடைய பாம்பினைப் போன்ற; வால் சுற்றி - வாலினால்
(தன்னுடம்பைச் சுற்றிக் கொண்டு); நின்றான் - (பேருருவத்தோடு)
நின்றவனாகிய அனுமன்; மக ஆமை முதுகில் தோன்றும் - திருமாலாகிய
பெரிய ஆமை முதுகின்மேல் விளங்கித் தோன்றிய; மந்தரம் எனலும்
ஆனான் -
மந்தரமலை என்று சொல்லத்தக்கவனுமானான்.

     அனுமன் உடற்சுமையால் தரையில் அழுந்துகின்ற மகேந்திரமலை -
கூர்மாவதார ஆமைக்கும் மகேந்திரமலையில் நின்ற அனுமன் - பெரிய
கூர்மத்தால் தாங்கப்பெற்ற மந்தரமலைக்கும், அனுமனது உடலைச் சுற்றிய
அவனது வால் - மந்தர மலையைச் சுற்றிய வாசுகிக்கும் ஒப்பாயின என்றார்.
                                                           28