4742.கண்டனன்,இலங்கை மூதூர்க்
     கடிபொழில்கனக நாஞ்சில்
மண்டல மதிலும்,கொற்ற
     வாயிலும், மணியின் செய்த
வெண்தளக் களபமாட
     வீதியும்,பிறவும் எல்லாம்;
அண்டமும்திசைகள் எட்டும்
     அதிர,தோள் கொட்டி ஆர்த்தான்
 

(அனுமன்)

    இலங்கை மூதூர்- பழைமையான இலங்கை நகரின்; கடிபொழில் -
காவற் சோலைகளையும்; கனக நாஞ்சில் - பொன்னாற் செய்த குருவித்
தலையையும்; மண்டலமதிலும் - வட்டமான மதிலையும்;கொற்ற வாயிலும் -
வெற்றியை அறிவிக்கும் கோபுர வாயிலையும் ; மணியின் செய்த வெண்தள
- மணிகள் பதிக்கப் பெற்ற வெண்மையான; களப மாட  வீதியும் - சுண்ணம்
பூசப்பெற்ற, மாளிகைகளை உடைய வீதியையும்; பிறவும் எல்லாம் -
(கூறப்பெறாது விடுத்த) பிறவற்றையும்; கண்டணன் - பார்த்தான்; அண்டமும்
- வானத்தின் உச்சியும்; திசைகள் எட்டும் - எட்டுத் திக்குகளும்; அதிர -
எதிரொலிக்க; தோள் கொட்டி ஆர்த்தான் - தோள்களைப் புடைத்து
ஆரவாரித்தான்.

     அனுமன் இலங்கைமூதூரின் காவற்சோலை முதலியவற்றைப் பார்த்து
மகிழ்ச்சியால் தோள்களைப் புடைத்து ஆரவாரித்தான்.

    இலங்கை மூதூர் -மூது இலங்கை ஊர். நாஞ்சில் - மதில் மேல் குருவித்
தலைபோல் அமைக்கப் பெற்ற உறுப்பு. சிலப்பதிகாரத்தில் அடைக்கலக்
காதையில் காண்க (217) அண்டம் - பிரபஞ்ச உருண்டை என்றும் கூறலாம்.
திசைகள் கூறப் பெற்றமையால் (அண்டம் என்பதற்கு) வான்முகடு கூறப்
பெற்றது. 'அண்டமுற நிமிர்ந்தாடும் அப்பன்' என்பர் அம்மையார் (மூத்த
திருப்பதிகம்). அதிர - எதிரொலிக்க. வீரர்கள் உற்சாகத்தால் தோள்
கொட்டுவர். 'தன் தோள் கொட்டித் தடவரையை... எடுத்தான்' (நாவரசர் -
ஆராத இன்னமுதை 10) கண்டனென்... பிறவும் என்னா... ஆர்த்தான் என்னும்
பாடம் கொண்டு மதில் முதலானவற்றைப் பார்த்தேன் என்று கூறி
ஆரவாரித்தான் என்று பொருள் கூறுவாரும் உளர். தளம் - சுண்ணச் சாந்து.
தாழியும் சாந்தும் தளம் ஆகும். (பிங் 3615) கடிபொழில் என்பது
காவற்காட்டை. இது காட்டரண். கொற்றவாயில் - கோபுரவாசல். நம் கோன்
கொற்றவாயில் (சிலம்பு 20-16) களப மாட வீதி - யானை செல்லும் வீதி
என்றும் கூறலாம்.                                              (2)