4744. | புகல்அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளைச் சீயம்பொங்கி, உகல்அருங் குருதிகக்கி, உள்ளுறநெரிந்த; ஊழின், அகல் இரும் பரவைநாண அரற்றுறுகுரல ஆகி, பகல்ஒளி கரப்ப,வானை மறைத்தன,பறவை எல்லாம். |
புகல் அரும்- நுழையமுடியாத; முழையுள் துஞ்சும் - குகையின்கண் உறங்கின்ற; பொங்கு உளைச்சீயம் - சிலிர்க்கின்ற பிடரி மயிரையுடைய சிங்கங்கள்; பொங்கி - கொந்தளித்து; உகல் அருங் குருதி கக்கி - சிந்தக் கூடாத இரத்தத்தை வெளிப்படுத்தி; உள்ளுற நெரிந்த - உள்ளே சிதைந்தன; பறவை எல்லாம் - எல்லாப் பறவைகளும்; அகல் இரும் ஊழின் பரவைநாண - பரந்த பெரிய ஊழிக்காலத்துக் கடல்கள் வெட்கம் அடைய; அரற்றுறு குரல ஆகி - கதறுகின்ற கூக்குரலை உடையனவாய்; பகல் ஒளி கரப்ப - சூரியனுடைய பிரகாசம் மறையும்படி; வானை மறைத்தன - ஆகாயத்தை மூடின. அனுமன் திருவடிபடஅழுந்திய மலைக்குகைக்குள் சிங்கங்கள் குருதி கக்கி நெரிந்தன. பறவைகள் வானை மறைத்தன. நெரிதல் - சிதைதல், நொறுங்குதல். வாளரக்கன் தலை பத்தும் நெரித்தவன் (நாவரசர் - மன்னு மலைமகள் 10) (4) |