4746.

பொன்பிறழ் சிமயக் கோடு
     பொடியுற,பொறியும் சிந்த,
மின்பிறழ்குடுமிக் குன்றம்
     வெரிந்உறவிரியும் வேலை,
புன் புற மயிரும்பூவா,
     கண்புலம்புறத்து நாறா,
வன்பறழ் வாயில்கவ்வி,
     வல்லியம்இரிந்த மாதோ.
 

     மின்பிறழ்குடுமிக் குன்றம் - ஒளி விளங்கும்தலைமையுடைய
மகேந்திர மலையின்; வெரிந் - முதுகின்கண்; பொன்பிறழ் சிமயக்கோடு -
பொன்போலப் பொலிவு பெற்ற சிகரமானது; உற - நன்றாக அழுந்த
(அதனால்); பொடியுறப் பொறி சிந்த - பொடிப் பொடியாகிப் பொறி பறக்க;
விரியும் வேலை - பிளவுபடும் சமயத்தில்; வல்லியம் - புலிகள்; புன்புற
மயிரும் பூவா
- மெல்லிய உடம்பில் பூனை மயிரும் முளைக்காத; புறத்துக்
கட்புலம் நாறா
- வெளியில் தோன்றும்படி கண்கள் திறவாத; வன்பறழ் -
(தம்முடைய) வலிமையான குட்டிகளை; வாயில் கவ்வி இரிந்த - வாயில் பற்றிஅஞ்சியோடின.

     சிகரம்பொடியாகி மலை பிளந்தது என்றும் கூறலாம். கோடு அழுந்தக்
குன்றம் பிளந்தது என்று இங்கே கொள்ளப் பட்டது. சிமயம் - சிகரம் -
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை (சிலம்பு 5-97) கோடு - சிகரத்தின்
நுனி. பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே (புறம் 2). உடலில்
தோன்றும் புல்லிய மயிரைப் பூனைமயிர் என்பர். சங்க இலக்கியம் அரிமயிர்
என்று பேசும். பறழ் - குட்டி, நாய், புலி முதலான விலங்குகளின் குட்டியைப்
பறழ் என்பது மரபு. புலிப்பறழ் அன்ன பூஞ்சினை வேங்கை (மரபியல்
மேற்கோள்) மலைக்கு முதுகு கூறப்பெற்றுள்ளது.                   (6)