4748. 
 

தாரகை,சுடர்கள், மேகம்
     என்று இவைதவிரத் தாழ்ந்து,
பாரிடை அழுந்துகின்ற
     படர்நெடும்பனிமாக் குன்றம்,
கூர் உகிர்க்குவவுத் தோளான்
     கூம்புஎனக்குமிழி பொங்க
ஆர் கலி அழுவத்துஆழும்
     கலம் எனல்ஆயிற்று அன்றே.

     தாரகை சுடர்கள்மேகம் என்று இவை- நட்சத்திரம், சூரிய
சந்திரர்கள்; மேகம் என்னும் இப்பொருள்கள்; தவிர - (சார்ந்து வராமல்)
நீங்கிநிற்க; தாழ்ந்து - இறங்கி; பாரிடை அழுந்துகின்ற - பூமியின்கண்
கீழ்நோக்கிப் போகும்; படர்நெடும் பனிமாக் குன்றம் - விரிந்து நீண்ட
குளி்ர்ந்த மலை; கூர்உகிர் குவவுத் தோளான் - கூர்மையான நகங்களையும்
திரண்ட தோள்களையும் உடைய அனுமன்; கூம்புஎன - பாய்மரம்
போலிருக்க; ஆர்கலி அழுவத்து - கடலின் ஆழத்திலே; குமிழி பொங்க
-நீர்க்குமிழிகள் கொந்தளிக்க;
ஆழும் கலம் எனல்ஆயிற்று -மூழ்குகினற்
கப்பல் என்று கூறும் தன்மையைப் பெற்றது.

     அனுமன் கப்பலின்பாய்மரம் போன்றிருந்தான். அழுந்தும் மலை
கடலுள் ஆழும்கப்பல் போன்றிருந்தது. கூம்பு - பாய்மரம். வங்கத்தின்
கூம்பேறும் மாப்பறவை போன்றேனே (குலசேகரர் 5-5). கப்பலையும்
மலையையும் ஒப்பிடுதலைக் குறுந்தொகையில் காண்கிறோம். 'வாழி தோழி
தெண்டிரைக் கடல் ஆழ் கலத்தில் தோன்றி - மாலை மறையும் அவர் மணி
நெடுங் குன்றே (குறு 240) அழுவம் - ஆழம் பரப்பும் ஆம்.        
  (8)