4749. | தாதுஉகுநறுமென் சாந்தம், குங்குமம்,குலிகம், தண்தேன், போதுஉகுபொலன்தாது, என்று இத் தொடக்கத்த யாவும் பூசி, மீதுஉறு சுனைநீர்ஆடி, அருவிபோய் உலகின் வீழ்வ, ஓதிய குன்றம்கீண்டு குருதிநீர்சொரிந்தால் ஒத்த. |
அருவி - மகேந்திரமலையின் அருவி; தாது - காவிக் கற்களையும்; உகுநறுமென் சாந்தம் - கரைந்து தேய்ந்த நறுமணம் வீசும் சந்தனக் குழம்பையும்; குங்குமம் - குங்குமப் பூக்களையும்; குலிகம் - சாதிலிங்கத்தையும்; தண்தேன் - குளிர்ந்த ; போதுஉகு - மலர்கள்சிந்திய; பொலன்தாது - பொன் நிறம் பெற்ற மகரந்தங்களையும்; என்று இத் தொடக்கத்த யாவும் - இது முதலான பல பொருள்களையும்; பூசி - தன்மேல் பூசிக் கொண்டு; மீதுறு - மலையின் மேலே உள்ள; சுனை நீர்அடி - சுனை நீரிலே குளித்து; உலகின் போய் வீழ்வ - பூமியில் பரந்து வீழும் காட்சி; ஓதிய குன்றம் - பேசப்பெற்ற மலை; கீண்டு - வயிறு பிளக்கப் பெற்று; குருதி நீர் சொரிந்தால் ஒத்த - இரத்தமாகிய நீரைச் சொரிவதைப் போன்றிருந்தன. மணமுள்ளபொருள்களைப் பூசி நீராடுவார் போல அருவி, மகரந்தம் முதலானவற்றைப் பூசிச் சுனையில் நீராடின. அது, நிலத்தில் பாயும்போது மலை பிளந்து குருதி வீழ்வது போன்றிருந்தது. உகும் - கரைந்து தேயும். உப்பு இயல் பாவை உறை உற்றதுபோல் உக்கு விடும், என் உயிர் என்னும் கலிப்பாவுக்கு (நெய்தல் 21-16-17) உரை வகுத்த நச்சினார்க்கினியர்,'உயிர்.... கரைந்து விடா நின்றது' என்று உரை வகுத்தார். குலிகம் - சாதிலிங்கம். குன்றுக்குக் குருதி குறிக்கப் பெறுகிறது. (9) |