4750. | 'கடல்உறுமத்துஇது' என்னக் கருவரை திரியும் காலை, மிடல்உறுபுலன்கள் வென்ற மெய்த்தவர் விசும்பின் உற்றார்; திடல்உறுகிரியில் தம்தம் செய்வினைமுற்றி, முற்றா உடல்உறு பாசம்வீசாது, உம்பர்செல்வாரை ஒத்தார். |
கருவரை - கரிய மகேந்திரமலை; கடல்உறு - பாற் கடலைச் சார்ந்த; மத்து இது என்ன - மத்து என்று கூறும்படி; திரியும் காலை - சுழல்கின்ற சமயத்தில்; மிடல்உறு - வன்மை மிக்க; புலன்கள் வென்ற மெய்த்தவர் - ஐம்புலன்களும் பொறிவழியே போகாமல் அடக்கிய முனிவர்கள்; விசும்பின் உற்றார் - ஆகாயத்தை அடைந்தார்கள் (அவர்கள்); திடல்உறு கிரியில் - மேட்டுப் பாங்கான மலையில்; தம்தம் செய்வினை முற்றி முற்றா - தாம் தாம் செய்யவேண்டிய கடமைகளைத் தொடங்கி நிறைவு செய்யாமல்; உடல்உறு பாசம் வீசாது - உடலின்கண் கொண்ட பற்றை விடாமல்; உம்பர் செல்வாரை, ஒத்தார் - விண்ணுலகத்திற்குச் செல்பவரை ஒத்தார். முனிவர்கள்ஆகாயத்தை அடைந்தது பற்றை விடாமையால் சுவர்க்கம் அடைந்தவரை ஒத்தனர். திரிதல் - சுழல்தல். மண்ணகந்திரிய... மால்வரை திரிய காலும் கதிரொடு திரிய (3517). செய்ய வேண்டியவற்றை நிறைவேற்றியிருந்தால் முத்தி பெற்றிருப்பர். நிறைவேற்றாமையால் அவர்கள் சுவர்க்கம் சென்றனர். (கீதை - தியான யோகம் 40) (10) |