மாணிஆம்வேடம் தாங்கி, மலர்அயற்குஅறிவு மாண்டு, ஓர் ஆணிஆய் உலகுக்குஎல்லாம், அறம்பொருள் நிரப்பும் அண்ணல், சேண்உயர்நெடுநாள் தீர்ந்த திரிதலைச் சிறுவன் தன்னைக் காணிய,விரைவில் செல்லும் கனகமால்வரையும் ஒத்தான்.
மாணிஆம் வேடம்தாங்கி - பிரமசாரியாகியகோலத்தை மேற்கொண்டு; மலர் அயற்கு - பிரம்ம தேவனைவிட; அறிவு மாண்டு - அறிவால் மாட்சிமை பெற்று; உலகுக்கெல்லாம் ஓர் ஆணியாய் - எல்லா உலகங்களுக்கும் ஒப்பற்ற அச்சாணிபோல அமைந்து; அறம் பொருள் - அறத்தையும் பொருளையும்; நிரப்பும்அண்ணல் - பூரணத்துவமடையச் செய்யும் அனுமன்; நெடுநாள்தீர்ந்த- நீண்ட நாட்களுக்குமுன் பிரிந்து போன; சேண்உயர் - மிக்க உயர்வினையுடைய ; திரிதலைச் சிறுவன்தன்னை - திரிகூடம் என்னும் புதல்வனை; காணிய விரைவில்செல்லும் - காண்பதற்காக வேகமாகப் போகிற; கனகமால் வரையும் ஒத்தான் - பொன் வடிவமான மேருமலையைப் போன்றிருந்தான்.
அனுமன் திரிகூடமலையாகிய மைந்தனைத் தேடிச் செல்லும் மேருமலையைப் போன்றிருந்தான். நிலையில் திரியாது அடங்கும் அனுமனை மேருமலை என்றும் இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் ஆதாரமானது அனுமன் மேற்கொண்ட பிரம்மசரியம் ஆதலின் ஆணி என்றும் கூறினான். அயற்கு அறிவு மாண்டு - உருபு மயக்கம் ( தொல் - சொல் 111) இராமபிரான் அனுமனை 'ஆணி இவ்வுலகுக்கு எல்லாம்' என முன்பு கூறினான் (3769). (26)